தினகரன் தரப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து அவர்களால் தொடரப்பட்ட வழக்கு, தீர்ப்புத் தேதிக்காகக் காத்திருக்கும் நிலையில் அந்த வழக்கின் இணை வழக்கு என்று கருதப்படும் ஓ.பன்னீர் உள்ளிட்ட 11 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற வழக்கு நேற்று (பிப்ரவரி 13) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
திமுக கொறடா சக்கரபாணி தொடுத்த இந்த வழக்கில், ‘பதில் சொல்ல அவகாசம் வேண்டும்’ என்பதே சபாநாயகர் தரப்பின் முக்கிய வாதமாக இருந்திருக்கிறது.
நேற்று சக்கரபாணி தரப்பில் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞரான அமரேந்தர் சரண் ஆஜரானார். அவரோடு மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ உள்ளிட்டோரும் ஆஜரானார்கள்.
சக்கரபாணி தரப்பு தனது வாதத்தை நேற்று முன்வைக்கையில், ‘ஓ.பன்னீர் செல்வமும் அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களான 11 பேரும் பிப்ரவரி 18 – 2017 அன்று சட்டமன்றத்தில் அதிமுக கொறடாவின் உத்தரவை மீறினார்கள் என்பது தெளிவாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நம்பிக்கை வாக்கெடுப்பு முடிவின்போதும், கொறடாவின் பதிவிலும் ஓ.பன்னீர் உள்ளிட்ட 11 பேர் கொறடா உத்தரவுக்கு நேர் எதிராக செயல்பட்டது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. கொறடா உத்தரவை மீறினால் சபாநாயகர் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் சட்டத்தில் தெளிவாக இருக்கிறது. ஆனால், இதில் சபாநாயகர் செயல்படவே இல்லை. இந்தியத் தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர் அணி தாக்கல் செய்த ஆவணங்களிலும் தாங்கள் எப்படி ஆட்சிக்கு எதிராகச் செயல்பாட்டோம்’ என்பதை விளக்கியிருக்கிறார்கள்.
மேலும், ‘தமிழ்நாடு சட்டமன்ற தகுதிநீக்க விதிகளின்படி, தகுதி இழப்புக்கு போதிய காரணங்கள் இருந்தால் சட்டமன்ற உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும் சபாநாயகரிடம் புகார் செய்யலாம் என்று இருக்கிறது. அதன்படிதான் சக்கரபாணி புகார் கொடுத்திருக்கிறார்’ என்று வாதிட்டனர்.
பகல் 12 மணிக்குத் தொடங்கிய இந்த வாதம் உணவு இடைவேளைக்கு முன்பு முடிந்து, உணவு இடைவேளைக்குப் பின்னர் தொடர்ந்து நான்கு மணி வரை நீடித்தது. இன்னும் 45 நிமிடங்கள் வேண்டும் என்று நேரம் கேட்டு இன்றும் வாதத்தைத் தொடர இருக்கிறார்கள் சக்கரபாணி தரப்பு வழக்கறிஞர்கள். இன்று அநேகமாக சக்கரபாணிக்காக மூத்த வழக்கறிஞரான முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சபாநாயகர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் ஆஜரானார்.
**ஓ.பன்னீர், 11 எம்.எல்.ஏ.க்கள் பிப்ரவரி 18ஆம் தேதி கொறடா உத்தரவை மீறி அரசுக்கு எதிராக வாக்களித்தார்களா? இல்லையா?**
**அதன் பேரில் கட்சி அவர்கள் மேல் 15 நாள்களுக்குள் மன்னிப்பு நடவடிக்கை எடுக்கவில்லை என்பது உண்மையா? இல்லையா?**
**16ஆம் நாளில் இருந்து அவர்கள் தகுதிநீக்கத்துக்கு ஆளாகிறார்கள் என்று அரசியல் அமைப்பு சட்டத்தின் பத்தாவது அட்டவணை தெரிவிக்கிறதா? இல்லையா?**
**16ஆம் நாள் தொடங்கி சுமார் ஒரு வருடம் நெருங்கியும் சபாநாயகர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? ஒரு நோட்டீஸ்கூடக் கொடுக்காதது ஏன்?**
– இந்தக் கேள்விகளுக்கெல்லாம் இன்று சபாநாயகர் தரப்பும், பன்னீர் தரப்பும் பதில் சொல்ல வேண்டும்.
இதற்கிடையே சிலர், ‘18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கையும், 11 பேர் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்ற வழக்கையும் ஏன் முடிச்சு போடுகிறீர்கள்?’ என்று கேட்கின்றனர்.
இதற்கு இதே உயர் நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி 9ஆம் தேதி தினகரன் தரப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தபோது நடந்த சம்பவமே சாட்சி.
இந்த வழக்கில் டி.டி.வி.தினகரன் தரப்பு சட்டமன்ற உறுப்பினர்களின் இறுதி வாதம் முடிவடைந்துவிட்ட நிலையில், முதல்வர் தரப்பின் வாதங்கள் முன்வைக்கப்பட்டன, ‘தினகரன் தரப்பின் 18 சட்டமன்ற உறுப்பினர்களும் ஆளுநரைச் சந்தித்து முதல்வருக்கு எதிராக மனு அளித்ததன் மூலம் அவர்கள் அரசுக்கு எதிராகச் செயல்பட்டது தெளிவாகிறது. கட்சிக்கும், ஆட்சிக்கும் எதிராக அவர்கள் செயல்பட்டனர்’ என்று வாதிட்டனர்.
முதல்வர் தரப்பின் வாதங்களின்போது தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமைதி காத்தார். மற்றொரு நீதிபதியான சுந்தர் அடிக்கடி கேள்விகள் கேட்டபடி இருந்தார்.
“அந்த 18 பேரும் ஆளுநரிடம் புகார் அளித்தது தவறு என்கிறீர்கள். அவர்கள் கட்சிக்கும் ஆட்சிக்கும் எதிராகச் செயல்பட்டதாகக் கூறுகிறீர்கள். அதேநேரம் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சிக் கொறடா உத்தரவை மீறி அரசுக்கு எதிராக வாக்களித்தார்களே, அது கட்சிக்கு எதிரான, ஆட்சிக்கு எதிரான செயல்பாடு இல்லையா? அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?’’ என்று கேட்டார்.
இதை எதிர்பார்க்காத முதல்வர் தரப்பினர், “அந்த விவகாரம் தனி பெட்டிஷனாக நீதிமன்றத்தின் முன் இருக்கிறது. அந்த விசாரணை வரும்போது பதில் சொல்கிறோம்” என்றனர்.
நீதிபதி சுந்தரோ, “இரண்டும் ஒரே பிரச்னைதான். ஆட்சிக்கு எதிராகச் செயல்பட்ட புகார் அவர்கள் மீதும் உள்ளது. எனவே, அந்த 11 பேர் மீதும் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?” என்று மீண்டும் மீண்டும் கேட்டார்.
எனவே, தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கும், ஓ.பன்னீர் உள்ளிட்ட 11 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற வழக்கும் ஒரே பிரச்னையின் அடிப்படையிலான இரு வழக்குகள் என்பதை சென்னை உயர் நீதிமன்றமே உறுதி செய்துள்ளது.
சக்கரபாணி தரப்பின் வாதங்களுக்கும், நீதிமன்றத்தின் கேள்விகளுக்கும் இன்று சபாநாயகர் தரப்பு என்ன பதில் சொல்லப் போகிறது என்பதை அறிய நீதி தேவதையும், ஜனநாயக தேவதையும் ஒருங்கே காத்திருக்கிறார்கள்.
தொகுப்பு: ஆரா
ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட் தொடரும்…
ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்… – மினி தொடர் 1
ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்… – மினி தொடர் 2
ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்… – மினி தொடர் 3
ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்… – மினி தொடர் 4
ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்… – மினி தொடர் 5
ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்… – மினி தொடர் 6