குற்றவாளி என தீர்ப்பு: காரில் இருந்து தேசியக் கொடியை கழற்றுகிறாரா அமைச்சர் பொன்முடி?

Published On:

| By Aara

Ponmudi remove the national flag from the car

Ponmudi remove the national flag from the car

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அமைச்சர் பதவியை இழக்கிறாரா என்ற பரபரப்பு அரசியல் வட்டாரங்களில் ஏற்பட்டுள்ளது.

தமிழக ஊழல் மற்றும் ஊழல் தடுப்பு இயக்குனரகம் (டிவிஏசி) பதிவு செய்த சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவியை விடுவித்த விசாரணை நீதிமன்ற உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் இன்று (டிசம்பர் 19) செவ்வாய்க்கிழமை ரத்து செய்தது.

பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி குற்றவாளிகள் இல்லை என 2016ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நீதிபதி   ஜி. ஜெயச்சந்திரன் ரத்து செய்தார். ஏப்ரல் 2016 இல் சிறப்பு நீதிபதி டி.சுந்தரமூர்த்தி, பொன்முடி மற்றும் விசாலாட்சியை விடுவித்தார். இவ்வழக்கின் அரசுத் தரப்பு DVAC, அத்தகைய உத்தரவை எதிர்த்து 2017  இல்  மேல்முறையீடு செய்தது. DVAC இன் மேல்முறையீடு உயர் நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது.

மேலும் பொன்முடியும் அவரது மனைவியும் டிசம்பர் 21 ஆம் தேதி நேரடியாகவோ அல்லது வீடியோ கான்பரன்சிங் முறையிலோ நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும், அன்று விதிக்கப்படும் தண்டனையின் அளவை முடிவு செய்வதாகவும் உத்தரவிட்டார்.

இந்த தீர்ப்பு வந்த நிலையில் அமைச்சர் பொன்முடி விழுப்புரத்தில் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்றுக் கொண்டிருந்தார். 11 மணியளவில் சமூக நலத்துறை சார்பில் திருமண நிதியுதவித் தொகை தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன்பிறகு, “மக்களுடன் முதல்வர்” திட்டத்தில், பொதுமக்கள் மனுக்கள் வழங்கியதை ஆய்வு செய்தல், அரசூரில் வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்தல், விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியில் நடைபெற்ற பரிசு வழங்கும் நிகழ்ச்சி, கண்டாச்சிபுரம் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டியை வழங்கும் நிகழ்ச்சி ஆகியவற்றில் கலந்துகொண்டார்.

அப்போது உயர் நீதிமன்ற உத்தரவு பற்றி சொல்லப்பட்டதும் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு விழுப்புரம்- பாண்டிச்சேரி சாலையில் உள்ள சண்முகாபுரத்தில் இருக்கும் தனது வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார்.

இதுகுறித்து தனது வழக்கறிஞர்களிடம் இன்று வீட்டில் இருந்தபடியே ஆலோசனை நடத்தினார் பொன்முடி.

உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி பொன்முடி குற்றவாளி என்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. தண்டனை என்ன என்பதைதான் உயர் நீதிமன்றம் நாளை மறுநாள் அறிவிப்பதாக கூறியிருக்கிறது. ஒருவேளை இரண்டு ஆண்டுகளோ அதற்கு மேலோ சிறை தண்டனை விதிக்கப்பட்டால் பொன்முடியின் சட்டமன்ற உறுப்பினர் பதவி ரத்தாகும் நிலை ஏற்படக் கூடும்.

இந்த நிலையில் அமைச்சர் பொன்முடி வீட்டை விட்டு வெளியே வரும்போது தனது காரில் தேசியக் கொடியை வைத்திருக்கிறாரா அல்லது கழற்றிவிட்டாரா என்பதை கவனிப்பதற்காக பொன்முடியின் வீட்டு வாசலில் கட்சியினரும் செய்தியாளர்களும் திரள ஆரம்பித்தனர்.

இந்த நிலையில் அமைச்சர் பொன்முடி தனது தேசியக் கொடி பொருத்தப்பட்ட வழக்கமான காரில் ஏறாமல் தனது மகனின் காரில் ஏறி இன்று பகல் சென்னைக்குப் புறப்பட்டுவிட்டார் என்கிறார்கள் விழுப்புரம் திமுகவினர்.

ஏற்கனவே ஓய்வு பெற்ற முதன்மை மாவட்ட நீதிபதி என்.வசந்தலீலா இந்த ஆண்டு ஜூன் மாதம் மற்றொரு சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து பொன்முடியை விடுவித்திருந்தார். இந்தத் தீர்ப்பை தானாக முன் வந்து மறு ஆய்வுக்கு எடுத்துக் கொண்டார் உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷ். இதை எதிர்த்து பொன்முடி உச்ச நீதிமன்றம் சென்ற நிலையில், ‘நீதித்துறைக்கு ஆனந்த வெங்கடேஷ் போன்ற நீதிபதிகள் கிடைத்ததற்காக கடவுளுக்கு நன்றி சொல்கிறோம்’ என்று சொல்லி பொன்முடியின் கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்.

இந்த நிலையில் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்படும் தண்டனை என்ன என்பது பற்றிய எதிர்பார்ப்பு சட்ட வட்டாரங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் அதிகரித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-வேந்தன்

ஆல்ரவுண்டர்களை குறிவைத்து தூக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்!

IPL2024: சென்னையுடன் போட்டா போட்டி… உலகக்கோப்பை வீரரை தட்டித்தூக்கியது சன்ரைசர்ஸ்!

Ponmudi remove the national flag from the car

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel