ஹிண்டன்பெர்க் ரிசர்ச் தொடர்பாக ரிசர்வ் வங்கி மற்றும் பங்கு சந்தை ஒழுங்குமுறை வாரியமான செபி தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
அதானி குழுமம் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பெர்க் ரிசர்ச் நிறுவனம் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தது.
இதனை தொடர்ந்து அதானி குழும பங்கு மதிப்பு கடந்த இரண்டு நாட்களில் ரூ.4.2 லட்சம் கோடி சரிவை சந்தித்தது.
தங்கள் நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தவறான உள்நோக்கத்துடன் ஹிண்டர்பெர்க் அறிக்கை வெளியிட்டிருப்பதாகவும், இதனால் ஹிண்டன்பெர்க் மீது வழக்கு தொடர உள்ளதாகவும் அதானி குழும நிறுவனம் தெரிவித்துள்ளது.
எங்கள் அறிக்கையில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அதானி குழுமம் எங்கள் மீது வழக்கு தொடர்ந்தால் அதனை எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம் என்று ஹிண்டன்பெர்க் ரிசர்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், அதானி குழுமத்துடன் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதால் ஹிண்டன்பெர்க் ரிசர்ச் தொடர்பாக ரிசர்வ் வங்கி மற்றும் பங்கு சந்தை ஒழுங்குமுறை வாரியமான செபி தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கறுப்புப் பணத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று கூறும் மோடி அரசாங்கம்,
அதானி குழுமத்தின் மீதான ஹிண்டன்பெர்க் ரிசர்ச் சட்டவிரோத நடவடிக்கைகளைக் கண்டும் காணாமலும் உள்ளது.
செபி மற்றும் ரிசர்வ் வங்கி இந்த குற்றச்சாட்டுகளை பெயரளவில் மட்டும் விசாரிக்காமல் முழுமையாக விசாரிக்குமா?,
எல்ஐசி, எஸ்பிஐ போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் அதானி குழுமத்தில் முதலீடுகள் செய்துள்ளது இந்தியாவின் நிதி அமைப்பை அபாயத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
இந்த நிறுவனங்கள் அதானி குழுமத்திற்கு தாராளமாக நிதியுதவி அளித்துள்ளன.
இதனால் எல்ஐசியின் பங்குச் சொத்துக்களில் 8%, அதாவது ₹74,000 கோடியும், எஸ்பிஐ 44 சதவிகித நிதி அதானி நிறுவனங்களிடம் உள்ளது.
தனியார் வங்கிகள் அதானி குழுமத்தில் முதலீடு செய்ய முன்வராதபோது, பொதுத்துறை நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.
ஹிண்டர்பெர்க் குற்றச்சாட்டின்படி, அதானி குழுமம் தனது பங்குகளின் மதிப்பை செயற்கையாக உயர்த்தி, பின்னர் அந்த பங்குகளை அடகு வைத்து நிதி திரட்டியுள்ளது.
அதானி நிறுவனத்தின் பங்குகள் விலை வீழ்ச்சியடையும் போது எஸ்பிஐ போன்ற வங்கிகள் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும்.
இந்தியர்கள் கடின உழைப்பால் சம்பாதித்த பணத்தை மோடியின் கூட்டாளிகள் சுரண்டுவதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
ஏகே62 படத்திலிருந்து விலகுகிறாரா விக்னேஷ் சிவன்? – குழப்பத்தில் அஜித் ரசிகர்கள்!