கர்நாடகா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய தேர்தல் வியூக நிபுணர் சுனில் கனுகோலுவை தனது தலைமை ஆலோசகராக நியமனம் செய்து இருக்கிறார் அம்மாநில முதல்வர் சித்தராமையா.
கர்நாடகாவில் கடந்த மே மாதம் 10 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், மே 13 தேதி வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றது. பின்னர், கர்நாடக மாநில முதல்வராக சித்தராமையாவும் , துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் பதவியேற்றனர்.
காங்கிரஸ் கர்நாடகாவில் ஆட்சியமைப்பதற்கு அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, டிகே சிவக்குமார், சித்தராமையா போன்ற பலர் தீவிரமாக செயல்பட்டனர்.
இவர்களைபோல் கர்நாடக தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் வெற்றிபெற முக்கிய காரணமாக இருந்தவர் சுனில் கனுகோலு. இவர் தான் கர்நாடக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்தார்.
அதன்படி செயல்பட்ட காங்கிரஸ் தேர்தலில் அபார வெற்றிபெற்றது. இந்நிலையில் தான் மீண்டும் முதலமைச்சராக காரணமாக இருந்த சுனிலுக்கு மிகப்பெரிய பரிசை அளித்து இருக்கிறார் சித்தராமையா.
தேர்தலில் வேட்பாளராக சுனிலுடன் பயணித்த சித்தராமையா, முதலமைச்சராகவும் அவருடன் இணைந்து பணியாற்ற விரும்பியிருக்கிறார். இதனிடையே தான் சுனிலை தன்னுடைய தலைமை ஆலோசகராக சித்தராமையா நியமனம் செய்து உள்ளார். இது கேபினட் அந்தஸ்துக்கு இணையான பதவியாகும்.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி நடத்திய பாரத் ஜோடோ யாத்திரை திட்டமிட்டதிலும் சுனிலின் பங்கு முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்