சூர்யா – ஜோதிகா: தென்மண்டல ஐஜியிடம் புகார்!

கீழடி அருங்காட்சியகத்தில் விதிமுறைகளை மீறி உள்ளே சென்று மாணவர்களை வெயிலில் காக்க வைத்ததாக நடிகர்கள் சூர்யா, ஜோதிகா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் கட்டப்பட்டுள்ள கீழடி அருங்காட்சியத்தை நேற்று முன்தினம் நடிகர் சிவக்குமார், அவரது மனைவி லட்சுமி சிவக்குமார், நடிகர் சூர்யா, மனைவி ஜோதிகா, இவர்களது குழந்தைகள் தேவ், தியா ஆகியோர் பார்வையிட்டனர். அவர்களுடன் மதுரை எம்.பி.சு.வெங்கடேசனும் பார்வையிட்டார்.

இந்நிலையில், கீழடி அருங்காட்சியகத்திற்குள் மதுரை எம். பி.சு.வெங்கடேசன், நடிகர்கள் சூர்யா, ஜோதிகா குடும்பத்தினர் விதிமுறைகளை மீறி உள்ளே சென்று மாணவர்களை வெயிலில் காக்க வைத்ததாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து கீழடி அருங்காட்சியகத்தை மத்திய அரசின் தொல்லியல் துறையின் கீழ் ஒப்படைக்க கோரியும் பா.ஜ.க சார்பில் தென்மண்டல காவல்துறை ஐஜி அஸ்ரா கர்க்கிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

மதுரை பா.ஜ.க மாநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன், வழக்கறிஞர் முத்துக்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆகியோர் இந்த மனுவை அளித்தனர்.

அதில், “சிவகங்கை மாவட்டம் கீழடியில் 8 கட்ட அகழ்வாராய்சியில் 2800 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான பொருட்களை தமிழக அரசின் தொல்லியல்துறை சார்பில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் கீழடி அருங்காட்சியத்தில் காட்சிப்படுத்தப்பட்டு முதல்வர் அதனை கடந்த சில வாரங்களுக்கு முன்பு திறந்து வைத்தார்.

காலை ஏழு மணி முதல் மாலை ஆறு மணி வரை பொதுமக்கள் நுழைவு கட்டணம் செலுத்தி அருங்காட்சியகத்தை பார்வையிடலாம் என அறிவிக்கபட்ட நிலையில் கடந்த 1ஆம் தேதி அருங்காட்சியகத்திற்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் மற்றும் நடிகர்கள் சூர்யா, சிவகுமார், ஜோதிகா அவர்களது குடும்பத்தினர் குறிப்பிட்ட கால வரையறை நேரத்திற்கு முன்பாகவே கீழடி அருங்காட்சியகத்திற்குள் சென்றனர்.

கண்காட்சி திறக்கும் நேரமான பத்து மணிக்கு மேலாகியும் பொதுமக்கள் அனுமதிக்கபடவில்லை. பள்ளி மாணவ மாணவிகள், வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் பல மணி நேரம் கால் கடுக்க கடும் கோடை வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டனர்.

மேலும் தனது தனிப்பட்ட நலனுக்காக எம்.பி.வெங்கடேசன் பாராளுமன்ற நடத்தை விதிகளை மீறி நடிகர்களை அழைத்து சென்றுள்ளார், இதற்கு அனுமதி அளித்த அனைத்து ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இனி வரும் காலத்தில் பொது மக்களின் நம்பிக்கையை பெறும் வகையில் கீழடி அருங்காட்சியகத்தின் பராமரிப்பு, மற்றும் நிர்வாகத்தை மத்திய அரசின் தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இராமலிங்கம்

கலாக்ஷேத்ரா ஹரிபத்மன் புழல் சிறையில்!

பல்பிடுங்கிய சர்ச்சை : நெல்லை எஸ்.பி.காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts