தமிழ்நாடு அரசின் திட்டங்கள் முழுமையாக மக்களைச் சென்றடைகிறதா என்பதை ஆய்வு செய்யவும், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக இரண்டு நாள் சுற்றுப்பயணமாக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (நவம்பர் 5) கோவை சென்றடைந்தார்.
சுமார் 12 மணி அளவில் கோவை சென்றடைந்த ஸ்டாலினுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் விளாங்குறிச்சியில் ரூ.158.32 கோடியில் 2.66 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள, எட்டு தளங்கள் கொண்ட ‘டைடல் பார்க்கை’ முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதன் மூலம் ஏறத்தாழ 3000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருடன் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வா.வேலு, மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஆகியோர் உடனிருந்தனர்.
திறந்து வைத்தபின், அந்த கட்டிடத்தின் அம்சங்களை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அதிகாரிகள் விளக்கினர். இதற்குப்பின் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வரவேற்புரை ஆற்றினார்.
இதனைத் தொடர்ந்து டைடல் பார்க்கின் கல்வெட்டைத் திறந்துவைத்த ஸ்டாலின் பின்னர் தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் (டைடல் பார்க்) குத்தகைதாரர்களுக்கு இட ஒப்பந்த ஆணைகளை வழங்கினார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
ஒரே மேடையில் விஜய்யுடன் பங்கேற்பா? : திருமா பதில்!
’அமரன்’ : நடிகர் சூர்யா, குடும்பத்துடன் வாழ்த்து!
மகாராஷ்டிரா தேர்தல்: 4140 வேட்பாளர்கள் போட்டி!