பாஜக தலைவர் மீது வன்கொடுமை சட்டம் பாய்ந்தது!

Published On:

| By Prakash

கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி மீது ஏற்கெனவே 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த நிலையில், கூடுதலாக வன்கொடுமை பிரிவை சேர்த்து நீதிமன்றத்தில் ஆவணங்களை காவல் துறையினர் இன்று (செப்டம்பர் 22) தாக்கல் செய்தனர்.

திமுக துணைப் பொதுச்செயலாளரும், நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான ஆ.ராசா, சென்னையில் செப்டம்பர் 6ம் தேதி, இந்துக்கள் குறித்துப் பேசியிருந்தார்.

அவருடைய பேச்சு, சர்ச்சைக்குரிய வகையில் இருப்பதாக, இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டினர்.

ஆ.ராசாவை எம்.பி. பதவியில் இருந்து நீக்கக் கோரி பா.ஜ.க., இந்து முன்னணி உள்பட பல்வேறு இந்து அமைப்புகள் பல்வேறுகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இந்து மக்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக திமுக எம்.பி. ஆ.ராசாவை கண்டித்து, கடந்த செப்டம்பர் 18ம் தேதி இந்து முன்னணி அமைப்பின் சார்பில், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதில், கோவை பீளமேடு புதூர் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய, பாஜக கோவை மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி, “ஆ.ராசா சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்.

பொய் சொல்லி சீட் வாங்கி ஜெயித்தவர். தொடர்ந்து ஆ.ராசா இப்படிப் பேசினால் கோவை மாவட்டத்தில் அனைத்து இந்து இயக்கங்கள் சார்பில் கோவை ஏர்போர்ட்டில் கால் எடுத்து வைக்கவிடமாட்டோம்.

coimbatore bjp leader booked under sc st atrocities prevention act

இந்த தேதியில் வருகிறேன் எனக்கூறி போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் கால் எடுத்து வை பார்க்கலாம்.

கோவை மாவட்டத்திற்குள், நீ எங்கே கால் எடுத்து வைக்கிறேன் என பார்க்கிறேன்” என சவால் விடுத்திருந்தார்.

பாலாஜி உத்தம ராமசாமியின் இந்த அவதூறான பேச்சுக்கு திமுக, திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு திராவிட அமைப்பினர், கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும், பாலாஜி உத்தம ராமசாமியின் இந்த பகிரங்க மிரட்டல் தொடர்பான பேச்சு வீடியோ சமூக வலைதளங்களிலும் வைரலாகியது.

இதையடுத்து, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கோயம்புத்தூர் பீளமேடு காவல் நிலையத்தில் பாலாஜி உத்தம ராமசாமி பேசிய வீடியோ ஆதாரத்துடன் ஒரு புகார் மனு அளித்தனர்.

அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினர்.

coimbatore bjp leader booked under sc st atrocities prevention act

இதைத் தொடர்ந்து பாஜக கோவை மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி மீது பீளமேடு காவல் துறையினர் 3 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இதையடுத்து நேற்று (செப்டம்பர் 21) அதிகாலையில் அவரை வீட்டில் இருந்து பீளமேடு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணைக்கு பின்னர் பாலாஜி உத்தம ராமசாமியை காவல் துறையினர் கைது செய்தனர்.

பின்னர் கோவை இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி செந்தில் ராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தி 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

இதனிடையே பாலாஜி உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து, பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாலாஜி உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் பாஜக கோவை மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி மீது எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமை சட்டத்தின்கீழ் பீளமேடு காவல் துறையினர் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஆ.ராசாவை இழிவுபடுத்தி பேசியதாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில்,

கூடுதலாக வன்கொடுமை பிரிவை சேர்த்து கோவை இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆவணங்களை காவல் துறையினர் தாக்கல் செய்தனர்.

இதனால் அவருக்கு ஜாமீன் கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஜெ.பிரகாஷ்

ஆ.ராசா நாக்கை அறுத்தால் 1 கோடி: அறிவித்தவர் கைது!

எப்போதும் பாஜகவுக்கு அடிபணிய மாட்டேன்: மீண்டு(ம்) வந்த லாலு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share