திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் 2வது முனைய திறப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பிரதமரிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார். CM Stalin pressed various demands on pm modi
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் 2வது முனையத்தை பிரதமர் மோடி இன்று (ஜனவரி 2) திறந்து வைத்தார். இந்த விழாவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
அப்போது, “திருச்சி பன்னாட்டு விமான நிலையம் தமிழ்நாட்டின் 2வது பெரிய பன்னாட்டு விமான நிலையம். இதை மேலும் விரிவாக்கம் செய்ய தமிழ்நாடு அரசு 318 கோடியே 85 லட்சம் ரூபாய் செலவில் 294.57 ஏக்கர் நில எடுப்பு செய்து இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு வழங்க நடவடிக்க எடுத்து வருகிறது.
திருச்சி உட்பட சென்னை, கோயம்புத்தூர், தூத்துக்குடி, மதுரை, வேலூர் விமான நிலையங்களில் விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்க 3 ஆயிரத்து 118 கோடி ரூபாய் செலவில் 2,302.44 ஏக்கர் அரசு மற்றும் பட்டா நிலங்களை இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த விரிவாக்க பணிகளை விரைவாக முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். தென் தமிழ்நாட்டில் ராமேஸ்வரம், கன்னியாகுமரி ஆகிய இடங்களுக்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் ஆன்மீக பயனமாக வருகிறார்கள். பல நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகளும் வந்து செல்கிறார்கள். அவர்கள் எளிதாக வந்து செல்வதற்கு ஏதுவாக மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக அறிவிக்க வேண்டும் என்று ஏற்கனவே வைத்த கோரிக்கையை பிரதமர் பரிசீலிக்க வேண்டும்.
மலேசியா மற்றும் ஜப்பான் நாடுகளுடன் தமிழ்நாடு பண்பாட்டு மற்றும் வர்த்தக தொடர்புகளை கொண்டுள்ளது. அதை கருத்தில் கொண்டு சென்னை – பினாங்கு, சென்னை – டோக்கியோ இடையே நேரடி விமான சேவையை முன்னுரிமை அடிப்படையில் தொடங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ஆம் கட்ட பணிகளுக்கு பங்கு பகிர்வு மாதிரி அடிப்படையில் ஒன்றிய அரசின் பங்களிப்பை விரைந்து வழங்க வேண்டும் என்று பிரதமரை கேட்டுக் கொள்கிறேன்.
சுங்கக்கட்டணம் விலக்கு!
சமீப காலமாக இருவழிசாலையாக மேம்படுத்தப்படுகின்ற நெடுஞ்சாலைகளுக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். திருச்சி மாவட்டத்தின் எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் தான் பெல் பொதுத்துறை நிறுவனத்திற்கு தேவையான உதிரி பாகங்களை வழங்கி வந்தது. தற்போது பெல் நிறுவனத்தில் இருந்து கேட்பானை குறைந்துவிட்டது. இதனால் இந்த பகுதியில் செயல்பட்டு வரும் எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் மிகவும் பாதிப்படைந்திருக்கிறது. எனவே பெல் நிறுவனம் மீண்டும் அதிக்கப்படியான கேட்பானைகளை வழங்க ஆவண செய்ய வேண்டும்.
கடந்த மாதம் சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் கடுமையான மழைப்பொழிவை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பொது உட்கட்டமைப்புகள் சேதம் அடைந்திருக்கிறது. மக்களின் வாழ்வாதாரமும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அவற்றை கடுமையான இயற்கை பேரிடர் என்று அறிவித்து தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தமிழ்நாட்டிற்கு தேவையான நிதியை வழங்க வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் சார்பாக நான் மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.
தொடர்ந்து கோரிக்கைகளாகவே வைக்கின்றேனே என்று எண்ண வேண்டாம். பரந்து விரிந்த இந்தியாவில் கோடிக்கணக்கான மக்களுக்கு நெருக்கமாக இருந்து கல்வி, மருத்துவம், அவசிய தேவைகள், உதவிகள் ஆகியவற்றை செய்து தர வேண்டிய முக்கிய கடமை மாநில அரசுகளுக்கு தான் இருக்கிறது. அந்த வகையில் தமிழ்நாடு அரசின் கோரிக்கைகளை பிரதமர் நிச்சயம் நிறைவேற்றி தருவார் என்று நம்புகிறேன்.
தமிழ்நாட்டிற்கு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
40 மத்திய அமைச்சர்கள் 400 முறை தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர் : மோடி
Pre Release Event: தேதி அறிவித்த கேப்டன் மில்லர் படக்குழு!
CM Stalin pressed various demands on pm modi