திமுக கட்சி, அமைச்சர்கள், குடும்பம் என எதுவுமே மு.க.ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இல்லை என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.
மதுரையில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், மூத்த தலைவருமான ஹெச்.ராஜா இன்று (மார்ச் 25 ) செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் புழுகு மூட்டையாக உள்ளது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் இன்னும் செயல்படுத்தவில்லை.
திமுக மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று வருகிறது. தமிழக அரசு மத்திய அரசின் திட்டங்களை தங்கள் திட்டங்கள் என கூறி வருகிறது” என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், தமிழக முதல்வர் ஸ்டாலினை “மாண்புமிகு பிரதமர் ஸ்டாலின்…” என்று கூறினார். ஆனாலும் அதனை திருத்திக் கொள்ளாமல் அப்படியே தன்னுடைய பேச்சை தொடர்ந்தார்.
அவர், ”திமுக கட்சி, அமைச்சர்கள், குடும்பம் என எதுவுமே மு.க.ஸ்டாலின் கண்ட்ரோலில் இல்லை, திமுகவில் தடி எடுத்தவன் தண்டல்காரன் என்ற நிலை உள்ளது. அதானி குழுமத்தால் யாருக்கு என்ன நஷ்டம் வந்துள்ளது. ஒரு பொதுத்துறை வங்கியாவது பாதிக்கப்பட்டதா?
ராகுல்காந்தி எப்போதும் நல்ல மனநிலையுடம் பேச மாட்டார். ராகுல்காந்திக்கு எதிராக தீர்ப்பு வந்ததால் எம்.பி பதவி தகுதியிழப்பு செய்யப்பட்டு உள்ளார்.” என்றார்.
மேலும், “மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வழக்கின் தீர்ப்பு வந்தால் உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்ற தீர்ப்பு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்ய டெல்லியில் குழு உள்ளது, அந்த குழுவே தேர்தல் கூட்டணியை முடிவு செய்யும்” என்று ஹெச்.ராஜா கூறினார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
அரசு பள்ளி மாணவர்களுக்காக களமிறங்கும் அஸ்வின்
காங்கிரஸ் இன்னும் மக்களிடம் செல்லவில்லை: பிரசாந்த் கிஷோர்