அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே வார்த்தைப் போர் மீண்டும் முற்றியிருக்கிற நிலையில், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று (ஜூன் 13) காலை 11 மணியளவில் தொடங்கியுள்ளது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஜூன் 12 ஆம் தேதி வெளியான ஆங்கில நாளேட்டில் ஜெயலிதா ஊழல் வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர் என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு எதிராக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கடுமையான வார்த்தைகளால் அண்ணாமலையை விமர்சித்திருந்தார். வரலாறு தெரியாத கத்துக்குட்டி அண்ணாமலை என்று கூறியிருந்தார்.
முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், ‘திமுகவின் பி டீம் ஆக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் அண்ணாமலை’ என்று இன்று விமர்சித்தார். பதிலுக்கு ஜெயக்குமார் மீதும் பாஜக தரப்பில் கண்டனங்கள் வைக்கப்பட்டன.
அதிமுக மாசெக்கள் கூட்டத்துக்காக தலைமைக் கழகத்துக்கு வந்த மாவட்டச் செயலாளர்கள் பலரும், ஜெயலலிதாவை விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது என்று கூறினர். மாசெ கூட்டத்துக்காக வந்த அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி, “அதிமுகவுக்கு பாஜக பயப்படுகிறதா? யாருக்கு யார் பயந்திருக்கிறார்கள் என்பது இந்த கூட்டம் முடிந்த பிறகு தெரியும்” என்று தெரிவித்தார்.
இதற்கிடையே உடல் நலக் குறைவால் சேலத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமி மருத்துவர் அறிவுறுத்தல்படி நீண்ட தூர கார் பயணம் மேற்கொள்ளாமல்… நேற்று இரவு ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் புறப்பட்டு இன்று காலை சென்னை திரும்பினார்.
ஏற்கனவே உறுப்பினர் சேர்க்கை, பூத் கமிட்டிகள் அமைத்தல், மதுரை மாநாட்டுப் பணிகள் ஆகியவை பற்றி விவாதிக்கத்தான் (ஜூன் 13) மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அண்ணாமலையின் இந்த பேட்டியைத் தொடர்ந்து உருவான அரசியல் சூழலும் இன்றைய மாசெக்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
–வேந்தன்
சர்வதேச விருதுகளுடன் வெளியாகும் ’கண்டதை படிக்காதே’!
வாக்கிங் சென்ற செந்தில் பாலாஜி : ரெய்டுக்கு வந்த அமலாக்கத் துறை!