ஜெயரஞ்சனுக்கு முதல்வர் ஸ்டாலின் தந்த புது அசைன்மென்ட்!
தமிழ்நாடு முதலமைச்சரும், மாநில திட்டக் குழுவின் தலைவருமான திரு. மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில திட்டக் குழுவின் ஐந்தாவது கூட்டம் ஆகஸ்டு 6 ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
முதலமைச்சரும், தமிழ்நாடு மாநிலத் திட்டக் குழுத் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில். திட்டக் குழுவின் துணைத் தலைவர் ஜெயரஞ்சன் மாநில திட்டக் குழுவில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
அப்போது, நான்காவது திட்டக் குழு கூட்டத்தில் முதலமைச்சர் அறிவுரைகளின்படியும், வழிகாட்டுதலின்படியும் மேற்கொள்ளப்பட்ட பணிகளான, புதுமைப் பெண் திட்டத்தின் தாக்கம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தால் அரசு தொடக்க பள்ளி மாணவர்களிடம் ஏற்பட்டுள்ள தாக்கம், எண்ணும் எழுத்தும் திட்டச் செயலாக்கத்தின் மதிப்பீடு போன்ற ஆய்வு முடிவுகள் குறித்தும் விவரித்தார்.
மேலும் மாநில திட்டக் குழுவால் செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டங்களான தமிழ்நாடு புதுமை முயற்சிகள் திட்டம், மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி திட்டம், வளமிகு வட்டாரங்கள் திட்டம், தமிழ்நாடு நிலப்பயன்பாட்டு ஆராய்ச்சி வாரிய பணிகள் பற்றியும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுகள் பற்றியும் விரிவாக விவரித்தார்.
அதனைத் தொடர்ந்து, கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட ஆவணப் படத்தினை பார்வையிட்டார் முதலமைச்சர்.
மிக மிக முக்கிய வழிகாட்டிகள்…
பிறகு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,
“இந்த அரசு மூன்றாவது ஆண்டைத் தொடர்ந்து நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. மாநில திட்டக் குழுவும் நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
நான்காவது ஆண்டில் நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் திட்டக் குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் அவர்களுக்கும், உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆட்சிச் சக்கரத்தை இயக்குபவர்களாக நாங்கள் இருந்தாலும், அதற்கு வழிகாட்டுபவர்களாக நீங்கள் இருக்கிறீர்கள். நாங்கள் செல்லும் பாதையைத் தீர்மானிப்பவர்களாக மட்டுமல்லாமல், அதில் உள்ள நிறைகுறைகளை எடுத்துச் சொல்பவர்களாகவும் நீங்கள் இருக்கிறீர்கள்.
அந்த வகையில் எனக்கும், இந்த அமைச்சரவைக்கும், ஆட்சிக்கும் மிக மிக முக்கியமான வழிகாட்டிகளாக நீங்கள் அமைந்துள்ளீர்கள்.
பேராசிரியர் ஜெயரஞ்சன் உள்ளிட்ட நீங்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு துறையிலும் பல்லாண்டுகால அனுபவம் கொண்டவர்கள். தங்களது அனுபவங்களையும், சிந்தனைகளையும் எங்களுக்கு தொடர்ந்து எடுத்துரைத்து வருகிறீர்கள்” என்ற ஸ்டாலின் தொடர்ந்து பேசுகையில்,
16 பக்க மார்க் ஷீட்
“கடந்த மார்ச் மாதம் என்னைச் சந்தித்த துணைத் தலைவர் ஜெயரஞ்சன் அவர்கள் துறை சார்ந்த 16 அறிக்கைகளை அளித்தார்.
தமிழ்நாடு அரசின் ஒவ்வொரு திட்டமும் எந்த அளவுக்கு மக்களுக்குப் பயனுள்ள திட்டமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பதை அந்த அறிக்கை மூலமாகத் தெரிந்து கொள்ள முடிந்தது.
இந்த அறிக்கையைதான், எங்களுக்கு தரப்படும் மார்க் ஷீட்டாக நான் நினைக்கிறேன்.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மூலமாக மாணவர்கள் மட்டுமல்ல, கல்வித் துறையில் அடைந்துள்ள வளர்ச்சி என்ன? மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலமாக கிராமப்புற சுகாதாரம் எந்தளவுக்கு மேன்மை அடைந்துள்ளது? நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பு கூடிவருவதால் சமூகம் அடைந்துள்ள வளர்ச்சி என்ன? என்பது போன்ற தகவல்கள் எங்களுக்கு கிடைத்தன.
நமது அரசின் ஒவ்வொரு திட்டமும், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரையும் மேம்படுத்துவதாக அமைந்துள்ளது.
காலை உணவுத் திட்டத்தால் மாணவர்களின் பள்ளி வருகை உயர்ந்துள்ளது என்பதை அறிந்தேன். இதனைவிட மகிழ்ச்சியான செய்தி வேறு எதுவும் இருக்க முடியாது.
மகளிர் உரிமைத் தொகை மூலமாக பெண்களின் பொருளாதாரச் சுதந்திரம் அதிகமாகி இருக்கிறது.
பேருந்துகளில் கட்டணமில்லா விடியல் பயணம் மூலமாகப் பெண்களின் சமூகப் பங்களிப்பு அதிகமாகி உள்ளது.
புதுமைப் பெண் திட்டத்தின் காரணமாக கல்லூரிக்குச் செல்லும் மாணவிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இப்படி ஒவ்வொரு திட்டமும் சமூகத்தின் பல்வேறு பிரிவினரையும் உயர்த்தி வருகிறது.
இந்த தகவல்களை எல்லாம் மக்களிடமிருந்து நேரடியாக நாங்கள் அறிந்தாலும், புள்ளிவிவரங்களாக நீங்கள் வழங்கி வருகிறீர்கள். இந்தத் திட்டக்குழு அமைக்கப்பட்டு முதல் முறையாக உங்களைச் சந்தித்தபோது நான் குறிப்பிட்டதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.
சமூக ரீதியான வளர்ச்சி…
சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை, மொழிப்பற்று, இன உரிமை, மாநில சுயாட்சி ஆகிய கருத்தியல்களின் அடிதளத்தில் நிற்கும் இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம்.
நமது மாநிலத்தின் வளர்ச்சி என்பதும் அதன் அடிப்படையில் இருக்க வேண்டும். தொழில் வளர்ச்சி, சமூக மாற்றம், கல்வி மேம்பாடு ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும். வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக மட்டுமல்ல, சமூக வளர்ச்சியாக இருக்க வேண்டும்.
பொருளாதாரம், கல்வி, சமூகம், சிந்தனை, செயல்பாடு ஆகிய ஐந்தும் ஒருசேர வளர வேண்டும். அதுதான் பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் காண விரும்பிய வளர்ச்சி. அதுதான் திராவிட மாடல் வளர்ச்சி!
ஏற்றத்தாழ்வு என்பது பொருளாதார ரீதியாக மட்டுமல்ல, சமூக ரீதியாகவும் இல்லை என்பதை உருவாக்க வேண்டும் என்று நான் அப்போது குறிப்பிட்டேன்.
இதே அடிப்படையில்தான், கடந்த மூன்றாண்டுகளாக எண்ணற்றத் திட்டங்களைத் தீட்டினோம். இன்னும் புதிய திட்டங்கள் வர இருக்கின்றன” என்று குறிப்பிட்டார்.
புதிய திட்டங்களை எதிர்பார்க்கிறேன்…
மேலும் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “மாநில திட்டக்குழுவின் மூலமாக புதிய, புதிய சிந்தனைகளை திட்ட வடிவங்களை நான் எதிர்ப்பார்க்கிறேன். கவனம் பெறாத துறைகளில் கவனம் செலுத்தி புதிய திட்டங்களை உருவாக்கித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நாங்கள் செயல்படுத்தி வரும் திட்டங்கள் எந்தளவுக்கு சிறப்பானவை என்பதை உங்கள் அறிக்கைகள் சொல்கிறது. அதனை இன்னும் சிறப்பானதாக நடத்துவதற்கு ஏதாவது ஆலோசனைகள் இருந்தாலும் சொல்லுங்கள். மேலும், ஆலோசனை சொல்வதோடு உங்கள் கடமை முடிந்துவிடவில்லை.
அந்த ஆலோசனைகள் செயல்படுத்தப்படுகிறதா என்பதையும் கண்காணியுங்கள். ஆலோசனைகளைச் செயல்படுத்துவதற்கு ஏதாவது தடை, தடங்கல்கள் இருக்கிறதா? என்பதைப் பாருங்கள்.
கடந்த முறை என்னிடம் தரப்பட்ட அறிக்கையில் கல்லூரி மாணவர்களுக்கான இறுதித் தேர்வு வினாத்தாள்களை மேம்படுத்துவது குறித்த ஆலோசனை சொல்லி இருந்தீர்கள். அது செய்யப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்யுங்கள்.
வேளாண்மை, காடுகள், வெப்பம் அதிகரிப்பு ஆகியவைக் குறித்த உங்களது ஆலோசனைகள், துறை சார்ந்த நிர்வாக நடவடிக்கைகளாக எந்தளவு மாறி உள்ளது என்பதையும் ஆய்வு செய்யுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மாநிலத் திட்டக் குழுவை இந்தியாவிலேயே முதன்முதலாக அமைத்தவர் தலைவர் கலைஞர் அவர்கள்.
ஒன்றிய அரசில் இருப்பதைப் போல மாநிலத்திற்கு இருக்க வேண்டும் என்று நினைத்ததற்குக் காரணம் அனைத்து வளங்களையும் கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு அமைய வேண்டும் என்ற அடிப்படையில் இதனை அமைத்தார்.
பசி இல்லை, பஞ்சம் இல்லை, வறுமை இல்லை, கொடுமையான தொற்று நோய் இல்லை, சாலைகள் இல்லாத கிராமங்கள் இல்லை, மின்சாரம் இல்லாத கிராமம் இல்லை, குடிதண்ணீர் இல்லாத கிராமம் இல்லை, பள்ளிகள் இல்லாத கிராமம் இல்லை;
இப்படி தன்னிறைவு பெற்றவையாக அனைத்து மாவட்டங்களையும் உருவாக்கினோம். எல்லா வளங்களும் இருக்கிறது என்ற நிலைமையை உருவாக்கி வருகிறோம்.
கல்வித் துறையில், வேளாண்மையில், உள்கட்டமைப்பு வசதியில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக வளர்ந்துவிட்டது. அனைத்துத் துறையும் சமச்சீராக வளர்ந்து வருகிறது.
நிதி ஆயோக் அறிக்கை அடிப்படையில் ஆய்வு
அண்மையில் நிதி ஆயோக் வெளியிட்ட அறிக்கை, மிக மிக மகிழ்ச்சியைத் தந்துள்ளது. அந்த அறிக்கையை முன் மாதிரியாக கொண்டு உங்களது ஆய்வறிக்கை ஒன்றை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நிதி வளம் இருக்குமானால், இன்னும் பல திட்டங்களை நம்மால் உருவாக்க முடியும். நிதி வளத்தை பெருக்கும் ஆலோசனைகளைச் சொல்லுங்கள்.
அறிவிக்கப்படும் திட்டங்கள் அனைத்து மனிதர்களையும் உடனடியாகச் சென்று சேரத் திட்டமிடுங்கள். காலதாமதமின்றி அனைத்துப் பயன்களையும் மக்கள் பெற்றாக வேண்டும். அதற்கான இலகுவான நிர்வாகச் சீர்திருத்தங்களைச் சொல்லுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.
ஜெயரஞ்சனுக்கு முதல்வர் கொடுத்த புதிய பணி!
இந்தக் கூட்டத்தில் பங்கெடுத்திருக்கும் நான், இந்த நேரத்தில் உங்களுக்கு ஒரு பணியை, பொறுப்பை வழங்க விரும்புகிறேன். நமது திராவிட மாடல் ஆட்சியின் நோக்கங்களை, சாதனைகளைச் சொல்லும் வகையில் ஒரு மாபெரும் கருத்தரங்கை சென்னையில் நீங்கள் நடத்திட வேண்டும். அதில் பல்துறை அறிஞர்கள், ஊடகவியலாளர்கள் போன்றவர்களைப் பங்கேற்க வைத்து, அவர்களது ஆய்வுக் கட்டுரைகளைப் பெற்று, அதனை வெளியிடுமாறு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
இது நமது அரசு என்ற எண்ணத்தோடு செயல்படும் துணைத் தலைவர் ஜெயரஞ்சன் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று உரையாற்றி முடித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.
இக்கூட்டத்தில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மாநிலத் திட்டக்குழு துணைத் தலைவர் பேராசிரியர் ஜெயரஞ்சன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, கூடுதல் தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், நிதித்துறை முதன்மைச் செயலாளர் த. உதயச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இவர்களோடு திட்டக் குழு உறுப்பினர்களான பேராசிரியர் இராம. சீனுவாசன், பேராசிரியர் ம. விஜயபாஸ்கர், மு. தீனபந்து, இ.ஆ.ப., (ஓய்வு), சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா. எழிலன், மருத்துவர் ஜோ. அமலோற்பவநாதன், சித்த மருத்துவர் கு. சிவராமன், முனைவர் நர்த்தகி நடராஜ், மாநில திட்டக்குழுவின் உறுப்பினர் செயலர் (முழு கூடுதல் பொறுப்பு) திருமதி எஸ். சுதா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
–வேந்தன்
Olympic 2024: இந்தியாவுக்கு பதக்கம் உறுதி… வினேஷ் போகத் புதிய வரலாறு!
டாப் 10 நியூஸ்: கலைஞர் நினைவு நாள் பேரணி முதல் கேகேஎஸ்எஸ்ஆர், தங்கம் தென்னரசு வழக்கு தீர்ப்பு வரை!