அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 20) தீர்ப்பு வழங்கியது.
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
செந்தில் பாலாஜியை 5 நாள் காவலில் எடுத்து விசாரித்த அமலாக்கத் துறை கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியது.
அப்போது அவர் மீது 120 பக்கங்களுக்கும் மேற்பட்ட குற்றப்பத்திரிக்கை, 3000 பக்கங்கள் அடங்கிய ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
பின்னர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி முன்பு ஆகஸ்ட் 29ஆம் தேதி செந்தில்பாலாஜி நேரில் ஆஜரானார். அப்போது மேலும் 17 நாள் காவலை நீட்டித்தும், அவர் ஜாமீன் கோரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தை நாடலாம் என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி செந்தில் பாலாஜி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரிய மனுவை விசாரித்த நீதிபதி அல்லி ஜாமீன் மனு மீது வரும் 20ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
அதேசமயம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 29ஆம் தேதி வரை, 6ஆவது முறையாக நீட்டித்து உத்தரவு பிறப்பித்தார்.
இந்த நிலையில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க மறுத்து, அவரது ஜாமீன் மனுவை நீதிபதி அல்லி தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.
ஜாமீன் மறுத்ததற்கான காரணங்கள் பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் நீதிபதி அல்லி கூறியுள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
பெரியார் சிலை மீது சாணம் வீச்சு: குவியும் கண்டனங்கள்!