கடந்த 2010ம் ஆண்டு மெட்ரோ ரயில் டெண்டர் ஒதுக்கீடுக்காக ரூ.200 கோடி லஞ்சம் வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் இன்று (ஏப்ரல் 15) மறுப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினரின் சொத்துபட்டியலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்டார்.
அப்போது, “கடந்த 2006-11ல் திமுக ஆட்சியில் இருந்தபோது சென்னையில் மெட்ரோ ரயில் முதல் கட்ட திட்டப் பணிக்கான டெண்டர் ஆல்ஸ்டாம் நிறுவனத்துக்கு கிடைக்க இரண்டு ஷெல் நிறுவனங்களின் மூலம் மு.க.ஸ்டாலின் ரூ. 200 கோடி லஞ்சம் வாங்கியதாக அவர் மீது அண்ணாமலை குற்றஞ்சாட்டினார்.
இது தொடர்பாக சிபிஐயிடம் புகார் அளிக்கப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், மெட்ரோ டெண்டர் ஒதுக்கீட்டில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என சென்னை மெட்ரோ நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து இன்று மெட்ரோ நிர்வாகம் அளித்துள்ள அறிக்கையில், ”2010ம் ஆண்டு வெளிப்படையான டெண்டர் முறையை பின்பற்றியதன் மூலம் பல நூறு கோடி மக்கள் பணம் சேமிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு தளவாடங்கள் வாங்கியதில் எந்தவிதமான ஊழலும் நடைபெறவில்லை. இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சுமத்தியுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளும் முற்றிலும் தவறானவை.” என்று குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் இந்த புகார் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்திருந்தது. அதில் “சென்னை மெட்ரோ நிறுவனம், தமிழக அரசு மற்றும் மத்திய அரசு நிறுவனம் இணைந்து இந்த மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்திய நிலையில், ஆல்ஸ்டாம் நிறுவனத்திற்கு எந்தவித சலுகையும் அளிக்கப்படவில்லை” என தெரிவிக்கப்பட்டது.
மேலும், ”இந்த டெண்டர் விவகாரத்தில் நியாயமான விதிமுறைகள் பின்பற்றப்பட்டு, ஒப்பந்தம் நடந்துள்ளதாகவும், முறைகேடுகள் எதுவும் நடக்கவில்லை. அனைத்து புகார்களும் தவறானவை, இந்த புகார்களை முற்றிலும் மறுப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
Comments are closed.