”கைத்தட்டல் வாங்க முயற்சிக்கும் விஷயம் இல்லை”: விஷாலுக்கு மேயர் பிரியா பதில்!

Published On:

| By christopher

கனமழையால் பாதிக்கப்பட்ட நிலையில் வீடியோ வெளியிட்டு அதிருப்தி தெரிவித்த நடிகர் விஷாலுக்கு மேயர் பிரியா தற்போது பதில் அளித்துள்ளார்.

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையினால், பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

பள்ளிக்கரணை, பெருங்குடி, மேற்கு தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் வீட்டிலிருந்து வெளியேறி மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

மக்கள் பலர் வெளியில் செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். அடிப்படைத் தேவையான உணவு கூட கிடைக்காமல் மக்கள் சிரமப்படுகின்றனர்.  தண்ணீர் நிரம்பியுள்ளதால் மாநகராட்சிக்குட்பட்ட 17 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன.

இந்த நிலையில்,சென்னை அண்ணா நகரில் உள்ள நடிகர் விஷாலின் வீட்டையும் வெள்ளநீர் சூழ்ந்த நிலையில், தனது ஆதங்கத்தை வீடியோவாக நேற்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார்.

குறிப்பாக சென்னை மேயர் பிரியா, சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகளை குறிப்பிட்டு காட்டமாக பேசியிருந்தார்.

மழைநீர் வடிகால் திட்டம் யாருக்காக?

அந்த வீடியோவில் ”சென்னை மேயர் பிரியா ராஜன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் உட்பட மற்ற அதிகாரிகள் இருக்கும் அதே நகரத்தில் வசிக்கும் குடிமகனாகவும், உங்களுக்கு வாக்களித்த வாக்காளர்களான நாங்கள் அதே நிலையில் இல்லை. மழைநீர் வடிகால் திட்டம் முழுவதும் சிங்கப்பூருக்காகவா அல்லது சென்னைக்காகவா?

2015 ஆம் ஆண்டில்  மழைவெள்ளத்தின் போது ஏற்பட்ட துன்பத்தில் உள்ள மக்களுக்கு உதவ நாங்கள் சாலைக்கு வந்தோம், ஆனால் 8 ஆண்டுகளுக்குப் பிறகு இன்னும் மோசமான நிலையைப் பார்ப்பது பரிதாபமாக இருக்கிறது என்பது எங்களுக்கு வேதனையாக உள்ளது.

இந்த நேரத்தில் உணவுப் பொருட்கள் மற்றும் குடிநீர் தேவைக்காக நாங்கள் தொடர்ந்து உதவி செய்கிறோம். ஆனால் இந்த நேரத்தில் ஒவ்வொரு தொகுதியின் அனைத்து பிரதிநிதிகளும் வெளியே வந்து, மக்களின் பயம் மற்றும் துயரத்தை துடைத்து நம்பிக்கை ஊட்டி, மக்களுக்கு உதவியை செய்ய விரும்புவார்கள் என்று நினைக்கிறேன்” என்று விஷால் வீடியோவில் பேசியிருந்தார்.

புயல் எச்சரிக்கை தொடங்கியது முதல் தமிழ்நாடு முதல்வர், அமைச்சர்கள் முதல் மாநகராட்சி, மின்சார கடைநிலை ஊழியர்கள் வரை சென்னை பல்வேறு இடங்களில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் விஷாலின் பதிவு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேயர் பிரியா பதில்!

இந்த நிலையில் சென்னை மேயர் பிரியா தற்போது விஷாலின் பதிவுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதில் ”2015 அம்மையார் ஜெயலலிதா ஆட்சியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தை விட மோசமான நிலை இப்போது ஏற்பட்டிருப்பது போல நடிகர் விஷால் சொல்லியிருக்கிறார். திரைப்பட வசனம் போல பேசிவிட்டு கைத்தட்டல் வாங்க முயற்சிக்கும் விஷயம் இல்லை இந்த பேரிடர்!

2015 பெருவெள்ளத்திற்கு பிறகும் ஐந்தரை ஆண்டுகளை ஆண்டது அதிமுக அரசுதான். திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பத்தாண்டுகளாக அதிமுகதான் ஆட்சியில் இருந்தது. மழைநீர் வடிகால் திட்டத்தை முதன்மையான திட்டமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது சென்னை மாநகராட்சி.

திமுக பொறுப்புக்கு வந்த 2021 மே மாதத்தில் இருந்து மழைநீர் வடிகால் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வந்தது. அப்படியான பணிகளால்தான் சென்னை காப்பாற்றப்பட்டிருக்கிறது. அந்த மழைநீர் கால்வாய்கள் மூலம்தான் கடந்த வாரம் முன்பு வரை பெய்த மழைநீர் எல்லாம் வெளியேறியது.

அதனை எல்லாம் பலர் பாராட்டி எழுதியது எல்லாம் உங்களுக்கு தெரியுமா? இப்போது பெய்துள்ள பெருமழை 2015-ம் ஆண்டைவிட அதிகம். பல ஆண்டுகளில் இல்லாத அளவு வரலாறு காணாத மழை. புயலால் கடல் கொந்தளிப்பு அதிகம் இருப்பதால்தான் மழைநீர் கால்வாய் மூலம் கடலில் கலக்க முடியாத சூழலில் மழைநீர் தேங்கியது.

2015-ம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 289 பேர் பலியானார்கள். 23.25 லட்சம் வீடுகள் நீரில் மூழ்கின. அப்படியான நிலையா இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது? 2015-ல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு விடுமுறை எதுவும் அறிவிக்கப்படவில்லை.

செம்பரம்பாக்கம் ஏரியைகூட முன்னறிவிப்பு இன்றி திறந்துவிட்டார்கள். இன்று முதலமைச்சரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கிறது. பல இடங்களில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளார்கள். சாய்ந்த மரங்கள் அகற்றப்பட்டுள்ளன.

படிப்படியாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. சுமார் 6 லட்சம் உணவு பொட்டலங்களை இதுவரை வழங்கியிருக்கிறோம். வெள்ளம் உங்கள் வீட்டிற்கு மட்டும் வரவில்லை. ஒட்டுமொத்த சென்னை மக்களும்தான் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் களத்தில் நின்று அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும், மாநகராட்சி ஊழியர்களும் செய்து வருகிறார்கள்.

தற்போது சூழ்நிலையில் அரசியல் செய்ய முயலாமல் கோரிக்கை ஏதேனும் இருந்தால் தெரிவிக்கவும். அரசு நிறைவேற்றித் தரும்!” என்று மேயர் ப்ரியா தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

சென்னையில் பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் தொடங்கியது!

ஜெயலலிதா நினைவு தினம்: காவல்துறை கட்டுப்பாடு!

 

 

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share