திருத்தப்பட்ட துறைமுகங்கள் வரைவு மசோதா 2022ல் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய அரசின் துறைமுகங்கள் வரைவு மசோதாவானது கடலோர மாநிலங்களின் உரிமையை பாதிப்பதாகவும், துறைமுகங்களின் எதிர்கால வளர்ச்சியை தடுப்பதாகவும் உள்ளதாக அந்தக் கடிதத்தில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
மாநிலங்களின் உரிமையை பாதிக்கக்கூடிய வகையில் வரைவுச்சட்டத்தில் இடம்பெற்றுள்ள பிரிவுகளை அகற்றவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அதே நேரத்தில் தனியாரின் பங்களிப்பு காரணமாக மாநில அரசுகளுக்குக் கிடைக்கக்கூடிய வருவாய் தனியாருக்கு செல்ல வாய்ப்புள்ளதால், இது தொடர்பான பிரிவுகளை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த வரைவு மசோதாவில் இடம்பெற்றுள்ள அதிகாரங்களை தனியாருக்கு கொடுக்காமல் மாநில அரசுகளுக்கு பலன்கள் கிடைக்கும் வகையில் திருத்தங்கள் செய்ய வேண்டும் என்றும் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
குறைந்தபட்ச அரசு அதிகபட்ச நிர்வாகம் என்ற வகையில் சிறு துறைமுகங்களில் வணிகம் செய்வதை இன்னும் எளிதாக்குவதை பிரதமர் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
-ராஜ்