ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சமர்ப்பிப்பதாக திமுக வேட்பாளர் சந்திரகுமார் தெரிவித்துள்ளார். chandrakumar huge win at erode east
கடந்த 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று (பிப்ரவரி 8) வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் 91,558 வாக்குகள் வித்தியாசத்துடன் மொத்தம் 1,15,709 வாக்குகள் பெற்று அபார வெற்றியை பதிவு செய்துள்ளார்.
இது கடந்த 2023ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் மறைந்த ஈவிகேஸ் இளங்கோவன் (1,10,186) பெற்ற வாக்குகளை விட அதிகமாகும்.
அவரைத்தொடர்ந்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 24,151 வாக்குகளை மட்டுமே பெற்று டெபாசிட் இழந்தார். அவருடன் சுயேச்சையாக போட்டியிட்ட 44 பேரும் தங்களது டெபாசிட்டை இழந்தனர்.
2026 தேர்தலுக்கு கட்டியம் கூறுகின்ற தேர்தல்! chandrakumar huge win at erode east
இந்த நிலையில் வெற்றி பெற்ற சந்திரகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வெற்றியை சமர்ப்பிக்கிறேன். அதே போல இந்த வெற்றிக்கு மிகவும் உறுதுணையாக இருந்த உதயநிதி ஸ்டாலினுக்கும், இந்த இடைத்தேர்தலை பொறுப்பேற்று, என்னை வழிநடத்தி, நேரடியாக மக்களை சந்தித்து தான் நம் ஓட்டுக்களை பெற வேண்டும் என ஈரோடு கிழக்கு புதிய ஃபார்முலாவை உருவாக்கி, மாபெரும் வெற்றியை பெற வைத்த அமைச்சர் முத்துசாமிக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஈரோடு கிழக்கில் எவ்வளவு அவதூறு கருத்துகளை பரப்பினாலும் இறுதியில் திமுகவே வென்றுள்ளது. 46 பேர் களத்தில் இருந்தாலும் 75 சதவீதம் வாக்குகளை பெற்று மிகப்பெரிய வெற்றியை திமுகவின் உதயசூரியன் பெற்றுள்ளது. இது ஈரோடு கிழக்கில் திமுக கடந்த தேர்தல்களில் வாங்கிய வாக்குகளை விட அதிகம்.
இந்த வெற்றி ஈரோடு கிழக்குக்கு மட்டுமல்ல, 2026 தேர்தலுக்கு கட்டியம் கூறுகின்ற தேர்தல். ஈரோடு கிழக்கில் திமுகவிற்கு எப்படி வரவேற்பு கிடைத்துள்ளதோ, அதே வெற்றி 2026-லும் கிடைக்க போகிறது” என்று சந்திரகுமார் பேசினார்.