தமிழகத்துக்கு வழங்கவேண்டிய வரி பங்கில் இருந்து ரூ. 4,758 கோடியை மத்திய அரசு இன்று(ஆகஸ்ட் 10) விடுவித்து இருக்கிறது.
மத்திய அரசு தொகுப்பிற்கு கிடைக்கக்கூடிய வரியில் இருந்து, மாநில அரசின் தேவைகள் மற்றும் திட்டங்களுக்கு எவ்வளவு தொகை விடுவிக்க வேண்டும் என்ற நிதிக் குழு பரிந்துரையின் அடிப்படையில் இந்த வரிப் பகிர்வு விடுவிக்கப்படுகிறது.
பல்வேறு மாநிலங்களுக்கு மத்திய அரசு தொகுப்பில் இருந்து ரூ.58,332 கோடி வரிபங்கினை விடுவிக்க வேண்டும். ஆனால், தற்போது இரண்டு தவணைகளின் தொகையாக ரூ.1,16,665 கோடியை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது.

தமிழகத்திற்கு மத்தியஅரசு வழங்கவேண்டிய வரி பங்கில் ரூ.4,758 கோடி நிதியை மத்திய நிதியமைச்சகம் விடுவித்து உத்தரவிட்டு உள்ளது. இந்த வரிப் பகிர்வு தொகையானது ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடும்.
அதன்படி உத்தரபிரதேச மாநிலத்துக்கு ரூ. 20,928 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பீகாருக்கு ரூ.11,734 கோடியும், மத்திய பிரதேசத்துக்கு ரூ.9,158 கோடியும், மேற்கு வங்கத்துக்கு ரூ.8,776 கோடியும் மகாராஷ்டிராவுக்கு ரூ.7,369 கோடியும், தமிழகத்திற்கு 4,758 கோடி என இரண்டு தவணையாக மத்திய அரசு விடுவித்துள்ளது.
மாநிலங்கள் தங்களுடைய முதலீடு மற்றும் இதர செலவினங்களை துரிதப்படுத்த வேண்டும் என்பதற்காகவும், மாநிலங்களின் கரங்களை வலுப்படுத்த வேண்டும் என்கிற மத்திய அரசின் உறுதியை வெளிப்படுத்தும் விதமாகவும் மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் காரணமாகவே இரண்டு தவணையாக வழங்கப்பட வேண்டிய வரி பங்கானது ஒரே தவணையாக விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கலை.ரா
டிஜிட்டல் திண்ணை: மோடி அழைப்பு- மீண்டும் டெல்லி செல்லும் ரஜினி