தமிழக அரசு குறித்து சமூக வலைதளத்தில் அவதூறாக பதிவிட்ட பாஜக ஐ.டி பிரிவு தலைவர் சி.டி.ஆர். நிர்மல்குமார் நாளை (நவம்பர் 2) நேரில் ஆஜராக வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
தமிழக பாஜக ஐ.டி. பிரிவு தலைவரான சி.டி.ஆர்.நிர்மல் குமார்,
”கடந்த அக்டோபர் 31ஆம் தேதி நடைபெற்ற முத்துராமிலிங்க தேவர் குருபூஜை விழாவுக்காக பிரதமர் மோடி தமிழகம் வர இருந்தது.
ஆனால் தமிழக அரசு சார்பில் மோடி வருகையையொட்டி பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து உறுதி அளிக்காததால்,
அவரது வருகை இந்த ஆண்டு தள்ளிப்போனது” என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இதுதொடர்பாக மொகிந்தர் அமர்நாத் என்பவர் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தார்.
இதன் பேரில் போலீசார் கடந்த அக்டோபர் 14ஆம் தேதி நிர்மல் குமார் மீது கலகம் செய்ய தூண்டுதல், வதந்தி பரப்புதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக நிர்மல் குமாரிடம் விளக்கம் கேட்க வேண்டி இருப்பதால், விசாரணைக்கு ஆஜராகுமாறு மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
நிர்மல் குமார் இவ்வழக்கு தொடர்பாக நாளை காலை 11 மணிக்கு சென்னை காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் அலுவலகத்தில் ஆஜராகவேண்டும் என சம்மனில் தெரிவிக்கபட்டுள்ளது.
ஜெ.பிரகாஷ்