பாஜக அறிவித்த பந்த்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை அவசர வழக்காக உயர் நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
காரில் சிலிண்டர் வெடித்த விவகாரத்தில் தமிழக அரசைக் கண்டித்து பாஜக வரும் அக்டோபர் 31ஆம் தேதி கோவையில் பந்த் நடத்துவதாக அறிவித்தது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் வெங்கடேஷ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், “சிலிண்டர் வெடித்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கும் தேசிய புலனாய்வு முகமையின் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்தச்சூழலில் கோவை மாவட்டத்தில் வரும் 31ஆம் தேதி பாஜக சார்பில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பந்த் அன்று தங்களது கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களை அடைத்து வியாபாரிகள் பந்த்துக்கு ஆதரவு தருமாறு பாஜகவினர் அழுத்தம் கொடுக்கின்றனர்.
இவ்வழக்கு ஏற்கனவே என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டுள்ளதால் மாநில அரசைக் குற்றம்சாட்டி பந்த் நடத்துவது தேவையற்றது. எனவே பந்த்துக்கு தடை விதிக்க வேண்டும் ”என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென மனுதாரர் தரப்பில் முறையிடப்பட்டது.
இந்த முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், பரத சக்கரவர்த்தி அமர்வு இன்று (அக்டோபர் 28) பிற்பகல் 12.30 மணிக்கு விசாரிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
பிரியா