தேர்தலின் போது இலவச அறிவிப்புகளை வெளியிடும் அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்பாக உச்ச நீதிமன்றத்தில் பாஜக வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய தரப்பில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று ( ஆகஸ்ட் 11 ) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு தொடர்பாக தேர்தல் ஆணையம் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்த நிலையில், அதன்பேரில் தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.
வாதங்களைக் கேட்ட பிறகு இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி ரமணா மற்றும் நீதிபதி கிருஷ்ணா முராரி , இலவசங்களை அறிவிக்கும் கட்சிகளின் பதிவை ரத்து செய்வது ஜனநாயக விரோத செயல்.
ஜனநாயக விரோத செயல் என்பதால் அதனை பரிசீலிக்க மாட்டோம். இந்தியா போன்றதொரு நாட்டில் இலவசங்களை கொடுக்காதீர்கள் என்று உத்தரவிட முடியாது.

இதை கொடுங்கள், இதை கொடுக்காதீர்கள் என்று உத்தரவிட்டால் அதை இந்தியா போன்ற நாட்டில் செயல்படுத்த முடியாது. அரசியல் கட்சிகள் இலவசங்கள் அறிவிப்பதும் வழங்குவதும் தீவிரமாக பரிசீலிக்கப்பட வேண்டியது” என்று கூறினர்.
இலவசங்களுக்கு செலவிடும் பணத்தை கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணிக்கு பயன்படுத்தலாம் என்றும், பொருளாதாரம் பாதிக்கப்படாத வகையில் மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தனர்.
தொடர்ந்து, இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 17 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
மு.வா.ஜெகதீஸ் குமார்