நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது பேசிய தி.மு.க எம்.பி கனிமொழி “மகாபாரதத்தில் திரெளபதி துகிலுரிக்கப்பட்டார். அவரை காப்பாற்ற கிருஷ்ணர் வந்தார். மணிப்பூரில் தங்களை காப்பாற்ற யாரும் வர மாட்டார்களா என்று அங்கு பாதிக்கப்பட்ட பெண்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள்” என்றார்.
நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “பெண்களுக்கு எங்கு பிரச்சனை நடந்தாலும் நாங்கள் அதனை அரசியலாக்க விரும்பவில்லை. 1989-ஆம் ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சேலை தமிழக சட்டசபையில் இழுக்கப்பட்டது.
இதனை பார்த்து அங்கிருந்த திமுகவினர் சிரித்தனர். இந்த செயலில் ஈடுபட்டவர்கள் திரெளபதி குறித்து பேச என்ன தகுதி இருக்கிறது”என்று தெரிவித்திருந்தார்.
நிர்மலா சீதாராமனுக்கு பதிலளித்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், “தமிழக சட்டசபையில் அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை. அது ஜெயலலிதாவின் நாடகம் என்பது அங்கிருந்த அனைவருக்கும் தெரியும்” என்று கூறியிருந்தார். மேலும், இது தொடர்பான விவாதங்களும் கடந்த மூன்று நாட்களாக சமூக வலைதளங்களில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஓ.பன்னீர் செல்வம்,”சட்டப்பேரவையில் ஜெயலலிதா அவமதிக்கப்பட்டதை ‘நாடகம்’ என்று சொல்லும் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம்” என இன்று (ஆகஸ்ட் 14) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”மத்திய அரசின் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவை உறுப்பினர் கனிமொழி மகாபாரதத்தில் திரௌபதிக்கு இழைக்கப்பட்ட அநீதியை பற்றி பேசியதை சுட்டிக்காட்டி, பெண்கள் எங்கு இழிவுபடுத்தப்பட்டாலும் அதனை கடுமையாக ஒடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதில் அரசியல் இருக்கக்கூடாது என்றும் தெரிவித்தார்.
மேலும், கனிமொழிக்கும், நாடாளுமன்றத்திற்கும் 25-03-1989 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நடந்த ஒரே ஒரு நிகழ்வை நினைவுபடுத்துவதாகத் தெரிவித்து, அந்த புனிதமான சபையில் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவரான ஜெயலலிதா தி.மு.க.வினரால் அவமானப்படுத்தப்பட்டதையும், அவருடைய புடவை இழுக்கப்பட்டதையும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு வந்தால் முதலமைச்சராகத்தான் திரும்ப வருவேன் என்று ஜெயலலிதா சபதம் எடுத்ததையும், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு முதலமைச்சராக பொறுப்பேற்றதையும் குறிப்பிட்டார். இது உண்மையிலே நடைபெற்ற சம்பவம்.
ஆனால், இந்தச் சம்பவம் நாடகம் என்று தி.மு.க. உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கூறினர். இதுகுறித்து ஒரு நாளிதழுக்கு பேட்டியளித்த தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் இதுபோன்ற நிகழ்வு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிகழவில்லை என்றும், அன்று சட்டமன்றத்தில் இருந்தவர்களுக்கு இது ஒரு நாடகம் என்பது தெரியும் என்றும் பேட்டியளித்து இருக்கிறார்.
நடந்த சம்பவத்தை, நடந்த உண்மையை திரித்துப் பேசுவது கடும் கண்டனத்திற்குரியது. இது குறித்து 25-03-1992 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பேசிய ஜெயலலிதா, “இது கருப்பு தினம் மட்டுமல்ல, வன்முறையால் அரசியலில் எதையும் சாதித்து விட முடியும் என்று தப்புக் கணக்கு போடுகிறவர்களுக்கு பாடமாக அமையும் தினம்” என்று குறிப்பிட்டார்.
தி.மு.க.வின் இதுபோன்ற ஜனநாயக விரோதச் செயல்களையெல்லாம் மனதில் வைத்துதான் 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மக்கள் ‘சாட்டை அடி’, ‘சம்மட்டி அடி’ கொடுத்தார்கள் என்பதை தி.மு.க. தலைவருக்கு நான் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்.
இது மட்டுமல்லாமல், 25-03-1989 ஆம் நாளைய நடவடிக்கைக் குறிப்புகளிலுள்ள செய்திகள் குறித்து 26-03-1992 அன்று அப்போதைய பேரவைத் தலைவர் அவர்கள் தீர்ப்பு வழங்கியிருப்பதையும், அவை நடவடிக்கைக் குறிப்புகள் என அன்றைய தினம் 25-03-1989 அன்று நடந்ததாக வெளியிடப்பட்டுள்ள இக்குறிப்புகள் அனைத்தும் நாடாளுமன்ற மரபுகள் மற்றும் நடைமுறைகளுக்கு முற்றிலும் விரோதமானவை. தீய நோக்கத்தோடும் திட்டமிட்டு சிலவற்றை மறைப்பதற்காகவும் செய்யப்பட்ட இடைச்செருகல் வேலை. மோசடி என்று தீர்ப்பளித்திருப்பதையும் தி.மு.க. தலைவருக்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
25-03-1989 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நடைபெற்ற நிகழ்வுகளை நன்கு கண்ணுற்றும் அதனை ‘நாடகம்’ என்று சொல்வதுதான் ‘நாடகம்’.
25-03-1989 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நடைபெற்ற நாகரிகமற்ற செயலை ‘நாடகம்’ என்று சொல்வது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமம். அன்று நடந்தது உண்மை என்பதை மக்கள் அடுத்து வந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில் உணர்த்திவிட்டார்கள் என்பதை தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். ஒருவேளை உண்மையை ‘நாடகம்’ என்று சொல்வதுதான் திராவிட மாடல் போலும்” என்று தெரிவித்துள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
WI vs IND: தொடரை இழந்த இந்தியா