இந்தியா பற்றிய பேச்சின் எடிட் செய்யப்பட்ட பகுதியை வைத்துக் கொண்டு பிரதமரே நாடாளுமன்றத்தில் பேசியதால்… கடந்த நாடாளுமன்றத் தொடர் முடிந்தபோது அனைத்துக் கட்சி எம்.பி.க்களாலும் கவனிக்கப்பட்டார் தமிழ்நாடு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு.
சில வாரங்கள் நகர்ந்த நிலையில் குஜராத்தில் நடந்த நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் இந்திய அளவில் தமிழ்நாட்டை பேசுபொருள் ஆக்கியிருக்கிறார் அமைச்சர் எ.வ.வேலு. குறிப்பாக தமிழ்நாட்டின் நீலப் பொருளாதாரத்தை மேம்படுத்தி அதன் மூலம் இந்தியாவின் நீலப் பொருளாதாரத்தையும் மேம்படுத்துவதற்கான திட்டங்களையும் கருத்துகளையும் குஜராத்தில் எடுத்து வைத்திருக்கிறார் அமைச்சர் எ.வ. வேலு.
கடலோர மாநிலங்களின் மேம்பாட்டுக் குழுமத்தின் 19 ஆவது கூட்டம் ஆகஸ்டு 18, 19 தேதிகளில் குஜராத்தின் கெவாடியா பகுதியில் நடைபெற்றது.
மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிகள் மற்றும் ஆயுஷ் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து இந்தியாவின் கடல்சார் துறைக்கான தொலைநோக்கு பார்வையை வெளியிட்டார்.
துறைமுகங்களுக்கு சாலை மற்றும் ரயில் இணைப்பு, சாகர்மாலா திட்டத்தின் மூலம் நிதியுதவி, தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகம், இந்திய துறைமுக சட்ட வரைவு, மிதக்கும் தோணித் துறை, கடல் விமான செயல்பாடுகள், இந்திய கடலோரக் காவல்படைக்கு ஒத்துழைப்பு அளித்தல் ஆகியவை தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் கடலோர மாநிலங்களின் துறைமுக அமைச்சர்கள் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் அதிகாரிகள் பங்கேற்றனர். அந்த வகையில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சரான எ.வ.வேலு இக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
அமைச்சர் தனது உரையில் தமிழ்நாட்டின் பாரம்பரிய கடல் போக்குவரத்துப் பெருமைகளில் தொடங்கி இத்துறையின் நவீன கால செயல் திட்டங்கள் வரையிலும் குறிப்பிட்டார்.
கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசும்போது,
தமிழ்நாட்டின் வரலாற்றுச் சிறப்பு மிக்க துறைமுகங்கள்!
“தீபகற்ப இந்தியா குறிப்பாக பண்டைய தமிழ்நாடு… தென்கிழக்கு ஆசியா இலங்கை மற்றும் மேற்கு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக இணைப்பில் ஒரு முக்கிய மையமாக விளங்கியது.
கொற்கை, குலசேகரப்பட்டினம், காயல்பட்டினம், அழகன்குளம், தேவிபட்டினம், நாகப்பட்டினம், பூம்புகார், கடலூர், அரிக்கமேடு, மரக்காணம், மாமல்லபுரம், பழவேற்காடு போன்ற பழங்கால தமிழக கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க துறைமுகங்கள் மற்றும் கோரமண்டல கடற்கரையில் உள்ள பல துறைமுகங்கள் தமிழ்நாட்டின் பொருளாதார மற்றும் கலாச்சார வரலாற்றில் குறிப்பிடத்தக்க பங்காற்றிக் கொண்டிருந்தன.
வ.உ. சிதம்பரனார் 1906 இல் பிரிட்டிஷ் இந்தியா ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனத்துடன் போட்டியிட சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் என்ற நிறுவனத்தை நிறுவினார். கடல் சார் மற்றும் துறைமுக துறையில் முன்னோடியாக இருக்கும் இந்த பாரம்பரியத்தை தொடரவும் இந்தியாவை தற்சார்புடைய நாடாக மாற்றவும் தமிழ்நாடு சிறந்த முயற்சிகளை மேற்கொள்ளும்” என்று தொடங்கினார் அமைச்சர்.
தொடர்ந்தவர், “தமிழ்நாடு கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் நுழைவாயிலுடன் கூடிய தனித்துவமான கடற்கரையை கொண்டுள்ளது. எங்கள் கடல் சார் மற்றும் துறை முகத் துறையை வலுப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு உறுதிபூண்டுள்ளோம். தமிழ்நாட்டில் உள்ள துறைமுகங்களை மேம்படுத்துவதில் ஒரு செயல் ஊக்கமான மற்றும் தாராளமான அணுகுமுறையை கொண்டுள்ளோம்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் சாகர்மாலா திட்டத்தின் கீழ் மானியமாக தமிழ்நாடு கடல் சார்ந்த வாரியத்திற்கு சுமார் 120 கோடி ரூபாய் நிதி உதவி அளித்த மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் அவர்களுக்கும் இந்திய அரசுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று ஒன்றிய அரசுக்கு நன்றி பாராட்டினார் அமைச்சர்.
இலங்கைப் படகு சேவைக்கு தயாராகும் நாகப்பட்டினம்
மேலும் அமைச்சர் பேசுகையில், “இந்தியாவை சர்வதேச அளவில் இணைக்கும் வகையில் இலங்கைக்கு துவங்க உள்ள முதன்மையான படகு சேவைக்கு வெளியுறவு அமைச்சகம் பச்சை கொடி காட்டியுள்ளது. முன்னெடுக்கப்பட்டுள்ள சர்வதேச பயணிகள் படகு சேவையானது நீண்ட காலமாக பகிரப்பட்ட வரலாறு மற்றும் ஆழமான கலாச்சார உறவுகளை கொண்ட இவ்விரு நாடுகளுக்கும் பயன் அளிக்கும்.
இரு நாடுகளுக்கு இடையே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் போக்குவரத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல் வர்த்தகத்தையும் மேம்படுத்தும்.
கூடிய விரைவில் பலன் கிடைக்கும் வகையில் இப்படகு சேவையை விரைவில் தொடங்குவதற்கு நாகப்பட்டினம் துறைமுகம் தயாராகி வருகிறது. ராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையே படகு சேவையை புதுப்பிப்பதற்கான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன் அதற்கான விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 1980 ஆம் ஆண்டு வரை செயல்பாட்டில் இருந்த இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாரம்பரிய கடல் வழிகளை புதுப்பிக்கும் வகையில் இத்திட்டம் இருக்கும்” என்றார் அமைச்சர் எ.வ. வேலு.
நீலப் பொருளாதாரத்தை உயர்த்தும் வேலுவின் திட்டங்கள்!
மேலும் கடல் வளம் தொடர்பான நீலப் பொருளாதாரத்தை மேம்படுத்துவது குறித்தும் அமைச்சர் எ.வ. வேலு பேசினார்.
“கடல் வளங்களை நிலையான முறையில் பயன்படுத்துவது என்பது பற்றிய ஒருங்கிணைந்த முடிவுகளுக்காக ஆற்றல் தொழில் துறை மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட கடலின் பல பங்காளர்களை ஒன்றிணைக்கும் கடல் இடம் சார்ந்த திட்டமிடலில் தமிழ்நாடு முன்னோடியாக உள்ளது. கடலோர கடல் வளங்களை பாதுகாப்பது நமது பொறுப்பும் கடமையும் ஆகும். நீண்ட கடற்கரையை பயன்படுத்தி கடலோர சுற்றுலா பொழுதுபோக்கு, கடல் நீர் விளையாட்டுகளை வழங்குவதன் மூலம் நீல பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான ஆய்வுகளை நாங்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்.
தமிழகத்தின் மத்தியில் உள்ள தொழிற்சாலை பகுதிகளுக்கு தேவையான சரக்குகளை கையாளக்கூடிய வகையில் கடலூர் பகுதியில் பெரும் திறன் கொண்ட பசுமை வளத் துறைமுகத்தை உருவாக்கவும் தமிழ்நாடு திட்டமிட்டுள்ளது. ஆண்டு ஒன்றுக்கு பத்து மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை இத் துறைமுகம் கையாளும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்று பேசினார் அமைச்சர் எ.வ.வேலு.
மத்திய அமைச்சருக்கு திருவள்ளுவர் சிலை நினைவுப் பரிசை அளித்த அமைச்சர் எ.வ.வேலு, தமிழ்நாட்டின் துறைமுக மேம்பாட்டுக்கும், சர்வதேச கடலோர சுற்றுலாத் துறைக்கும் எ.வ.வேலு மேலும் பல கோரிக்கைகளை மத்திய அமைச்சரிடம் இந்த கூட்டத்திலேயே எடுத்து வைத்துள்ளார். எ.வ.வேலுவின் தனிப்பட்ட நிர்வாக அணுகுமுறைகளைப் பாராட்டிய மத்திய அமைச்சர், விரைவில் தமிழ்நாட்டின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என்றும் வேலுவிடம் உறுதியளித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டின் சார்பாக நெடுஞ்சாலை துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ் தமிழ்நாடு கடல் சார்ந்த தலைமை நிர்வாக அலுவலர் நடராஜன் மாநில துறைமுக அலுவலர் எம் அன்பரசன் ஆகியோர் பங்கு பெற்றனர்.
அமைச்சர் எ.வ. வேலுவின் குஜராத் பயணம் தமிழக துறைமுக மேம்பாட்டுக்கும் நீலப் பொருளாதார வளர்ச்சிக்குமான அடுத்த கட்ட மேம்பாடாக இருக்கும் என்கிறார்கள் அதிகாரிகள்.
–வேந்தன்
”உதயநிதியால் நீட் தேர்வை ஒழிக்க முடியும்”: துரைமுருகன் நம்பிக்கை!
அடுத்த சூப்பர் ஸ்டார்: சர்ச்சைக்கு சத்யராஜ் வைத்த முற்றுபுள்ளி!