எடப்பாடி பழனிசாமி உருவப்படம் எரித்தவரை கட்சியிலிருந்து நீக்கிவிட்டு, உடனே அவரை கட்சியில் மீண்டும் சேர்த்தது கண்டிக்கத்தக்கது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று (மார்ச் 16) தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தேர்வை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதவில்லை. இந்த விவகாரம் கல்வி ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை எழுப்பியுள்ளது.
திமுக மண்ணை கவ்வும்
இந்நிலையில் சென்னை ராயபுரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசுகையில், “நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறோம். ஈரோடு கிழக்கு தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்காது.
ஏனென்றால் தமிழ்நாடு அரசுக்கு எதிராக மிகப்பெரிய எதிர்ப்பு அலை வீசி வருகிறது. திமுக கூட்டணி மண்ணை கவ்வும் வகையில் மக்கள் கொடுப்பார்கள்.
நீட்டை ஒழிக்கும் ரகசியம் எங்களுக்கு மட்டும் தான் தெரியும் என்றனர். ஆனால் 22 மாதங்களுக்குப் பிறகும் அந்த ரகசியத்தை சொல்லாமல் மக்களை ஏமாற்றி வருகின்றனர்
எனவே வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிற்கு மண்ணை கவ்வும் தோல்வியுடன், அதிமுகவுக்கு 40 தொகுதிகளிலும் வெற்றி கிடைக்கும்.” என்றார்.
குரங்கு கையில் சிக்கிய பூமாலை
தொடர்ந்து, திருச்சி சிவா எம்.பி வீட்டின் மீது தாக்குதல் குறித்து அவர் பேசுகையில், “துக்கம் தொண்டையை அடைக்கும் அளவிற்கு திருச்சி சிவா சோகமாக பேசி இருக்கிறார். திமுக எம்.பி-க்கே பாதுகாப்பு இல்லாதபோது மக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும். திருச்சி காவல்நிலையத்தில் புகுந்தே திமுகவினர் தாக்குதல் நடத்துகின்றனர். அவர்களை தற்காலிகமாகவே கட்சியில் இருந்து நீக்கியுள்ளது திமுக.
பத்திரிகைகளில் குற்றச்சம்பவங்களே அதிகமாக உள்ளது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, போதைப்பொருள் கடத்தல் சர்வ சாதாரணமாக நடக்கிறது. குரங்கு கையில் சிக்கிய பூமாலை போல திமுக கையில் சட்டம் ஒழுங்கு சிக்கி தவிக்கிறது. கட்சியையும் ஆட்சியையும் கட்டுப்படுத்த முடியாத ஒரு பொம்மை முதலமைச்சராக எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்கிறார்.” என்று தெரிவித்தார்.
மாணவிகளுக்கு ரூ.1000 திட்டம் தோல்வி
”அதே நேரத்தில் தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறை சீர் கெட்டுள்ளது. 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வை எழுதவில்லை என்பது வருத்தமான செய்தி. அந்த அளவிற்கு பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடுகள் உள்ளன.
பெண்கள் உயர்கல்விக்கு செல்ல வேண்டும் என்று ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள். ஆனால் இப்போது பிளஸ் 2 பொதுத்தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. அதனால் திட்டம் தோல்வியாக தான் பார்க்கப்படுகிறது. உதயநிதி ஸ்டாலினுக்கு ஜால்ரா அடிப்பதிலேயே அமைச்சர் அன்பில் மகேஷ் தீவிரமாக உள்ளார்” என்று அவர் தெரிவித்தார்.
எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றும் பாஜக
தொடர்ந்து பாஜக குறித்து அவர் பேசுகையில், “எடப்பாடி பழனிசாமி உருவப்பொம்மையை எரித்தது கண்டனத்திற்குரிய விஷயம். உணர்ச்சிவசப்படும் தொண்டர்களை கட்டுபடுத்தும் தகுதி தலைவருக்கு இருக்க வேண்டும். பாஜகவினரைப் போல் அதிமுகவினரும் ஆவேசப்பட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்?
நாங்கள் கூறிய பின்பு எடப்பாடி பழனிசாமி உருவப்படம் எரித்தவரை கட்சியிலிருந்து நீக்கிவிட்டு, உடனே அவரை கட்சியில் மீண்டும் ஏன் சேர்த்தீர்கள்? எதற்கு இந்த கண்துடைப்பு நடவடிக்கை? இந்த செயல் கண்டிக்கத்தக்கது.
பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டக்கூடாது. பாஜகவின் செயல் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போலாகிறது. அதிமுகவை சீண்டினால் எதிர்வினை அதிகமாக இருக்கும்” என ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
”நாடாளுமன்றத்தில் பேச அனுமதிப்பார்கள் என்று நம்புகிறேன்”: ராகுல் காந்தி
