குஜராத் மோர்பியில் நடந்த துயர சம்பவத்தில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட இரங்கல் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தின் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் மீது ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட தொங்கு நடைபாலம் நேற்று முன்தினம் அறுந்து விழுந்தது. இதில் 141 பேர் உயிரிழந்தனர். 60க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்னும் பலர் மாயமான நிலையில் 3வது நாளாக மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
நன்றி தெரிவித்த அண்ணாமலை
இந்நிலையில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இன்று தனது முகநூல் பக்கத்தில் குஜராத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிப்பதற்கு பதிலாக நன்றி தெரிவித்துள்ளார்.
அவரது பதிவில், ”குஜராத் மோர்பியில் பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களுக்கும், குடும்பத்தாருக்கும் நன்றிகள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து சர்ச்சைக்குரிய இந்த பதிவைக் கண்ட பலரும் சமூகவலைதளங்களில் குறிப்பிட்டு விமர்சித்தனர்.
விளக்கப் பதிவு!
இதனால் தனது முகநூல் பக்கத்தில் இருந்து முந்தைய பதிவை நீக்கிய அண்ணாமலை, அதற்கு விளக்க பதிவை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ”குஜராத்தில் நடந்த பால விபத்து குறித்து நான் பதிவிட்டிருந்த செய்தி முகநூலால் தவறாக மொழிபெயர்க்கப்பட்டது.
இதனை தெளிவுபடுத்தும் விதமாக குஜராத் சம்பவத்தை பற்றி பதிவிட்டிருந்த செய்தியை தமிழில் மீண்டும் ஒரு முறை பதிவிடுகிறேன்.
“குஜராத் மோர்பி நகரில் நடந்த பால விபத்து பெரும் மனவேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர்களது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். இந்தப் பால விபத்தில் சிக்கிய பலரைக் காப்பாற்றிய மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படைகளுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி!” என்று குறிப்பிட்டுள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
”இன்னைக்கு கனமழை பெய்யும்- வீட்டுக்குள் பத்திரமா இருங்க”: வெதர்மேன்!
Comments are closed.