கர்நாடகாவில் பாஜக எம்.எல்.ஏ அரவிந்த லிம்பாவலி, மனு அளிக்க வந்த பெண்ணை சிறையில் அடைத்து விடுவதாக மிரட்டிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியில் பணியாற்றும் ரூத் சாகே மேரி, நேற்று (செப்டம்பர் 2) ஒயிட்ஃபீல்டில் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்குச் சென்றபோது பாஜக எம்.எல்.ஏ அரவிந்த் லிம்பாவலியை சந்திக்க முயன்றுள்ளார்.
ஆனால் பாஜக எம்.எல்.ஏ அவரை நிராகரித்துவிட்டு கடந்து சென்றுள்ளார்.
இதனால் ரூத் அவரிடம் தனது கோரிக்கையைக் கேட்கும்படி கேட்டபோது, அரவிந்த் அந்த பெண்ணிடம் இருந்த மனுவை அவரிடமிருந்து பறிப்பதற்கு முயன்றுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணை சிறையில் அடைத்து விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.
தற்போது, பாஜக எம்.எல்.ஏ அரவிந்த் லிம்பாவலி, பெண்ணை மிரட்டிய வீடியோ வெளியாகி அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.
இது குறித்து ரூத் கூறியபோது, “நான் மனு அளிக்க சென்றபோது அவர் என்னிடமிருந்து மனுவைப் பறிக்க முயன்றார். மேலும் என்னைச் சிறையில் அடைத்துவிடுவதாக மிரட்டினார்.
அவர் என்னிடம் உங்களுக்கு மரியாதை இல்லையா?. நீங்கள் நிலத்தை ஆக்கிரமித்து விட்டு இப்போது எம்எல்ஏ முன் வருகிறீர்கள் என்று கூறினார்.
மேலும், அங்கிருந்த காவலர்களிடம் என்னை இழுத்துச் செல்லுமாறு கூறினார். இதனால் காவல் அதிகாரிகள் என்னை இரவு 10 மணி வரை காவலில் வைத்திருந்தார்கள். செல்போன் மூலம் யாரையும் அழைப்பதற்கு அனுமதிக்கவில்லை.
1971 ஆம் ஆண்டு கட்டப்பட்ட எனது சொந்தக் கட்டிடத்தை, குடியிருப்பு மற்றும் உள்கட்டமைப்பு சொத்துக்களுக்கு பொறுப்பான நிர்வாக அமைப்பு (பிபிஎம்பி) இடிக்க முயல்கின்றனர். எந்த பிரச்சனையாக இருந்தாலும், பொது இடத்தில் ஒரு பெண்ணிடம் எம்எல்ஏ சரியாக நடந்து கொண்டிருக்கலாம்.
அனைத்து பாஜக தலைவர்களும் திமிர்த்தனமாக நடந்துகொள்கிறார்கள். எம்.எல்.ஏ., லிம்பாவலி ரவுடியா?, மனுக்களைப் பெற்று, அவலங்களை கேட்கும் பொறுமை அவருக்கு ஏன் இல்லை?” என்றும் ரூத் கேள்வி எழுப்பியுள்ளார்.
மோனிஷா
277 எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கிய பாஜக : கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!