திமுகவின் பட்டத்து இளவரசர் உதயநிதி ஸ்டாலின் இதுவரை நடித்த படங்களில் தமிழ் நடிகைகளுடன் நடிக்கவில்லை. கோவையில் நடந்த தற்கொலைப்படைத் தாக்குதலை சிலிண்டர் விபத்து என்று திமுக அரசு கூறுவது வெட்கக்கேடானது என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திமுக அரசின் தமிழ் விரோதப்போக்கை கண்டித்தும், தமிழில் படிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் இன்று (அக்டோபர் 27) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடலூரில் பாஜக தலைவர் அண்ணாமலை இந்த போராட்டத்தில் கலந்து கொண்டார்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய அண்ணாமலை, “1965-ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டம் என்பது காளிகள் சேர்ந்து நடத்திய போராட்டம் என்று ஈ.வே.ராமசாமி தெரிவித்துள்ளார்.
ஈ.வே.ராமசாமி இந்தி எதிர்ப்பு குறித்து பேசியதை இந்தி எதிர்ப்பு அன்றும், இன்றும் என்ற புத்தகத்தை வாங்கி தமிழக முதல்வர் ஸ்டாலின் படிக்க வேண்டும். தமிழ் என்பது தெய்வீக மொழி, நம்முடைய மொழியில் மட்டும் தான் ஆண்டவன், இறைவன், இறையாண்மை, சனாதன தர்மம் அனைத்தும் கலந்திருக்கிறது.
தமிழ் மொழியை ஊக்குவித்தால் தமிழ் மண்ணிலே இறை நம்பிக்கையை ஊக்குவிக்கிறோம் என்று திமுகவிற்கு தெரியும். தமிழுக்கு பதிலாக ஆங்கிலத்தை புகுத்த வேண்டும் என்பது தான் திமுகவின் நோக்கம்.
கலைஞர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் தேவநாயகம், திருவள்ளுவர் கிறிஸ்துவரா என்ற ஒரு புத்தகம் எழுதினார். அந்த புத்தகத்திற்கு முன்னுரை எழுதியவர் கலைஞர் கருணாநிதி தான். இறை நம்பிக்கை உள்ள சங்க இலக்கியங்களை நம்மிடம் இருந்து கலைஞர் பிரித்து விட்டார்.
48 ஆயிரம் குழந்தைகள் இந்த ஆண்டு தமிழ் மொழியில் தேர்ச்சி பெறவில்லை. இதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெட்கி தலை குனிய வேண்டும். இந்தி திணிப்பு என்ற வார்த்தையின் மூலமாக, ஆங்கிலத்தை திணிப்பது தான் திமுகவின் நோக்கம்.
திமுகவின் பட்டத்து இளவரசர் உதயநிதி ஸ்டாலின் இதுவரை நடித்த படங்களில், தமிழ் நடிகைகளுடன் நடிக்கவில்லை. தமிழ்நாட்டிலிருந்து ஒரு சகோதரி கூட உதயநிதியுடன் நடிக்க தகுதி இல்லையா?
அமீர்கான் நடித்த லால் சிங் இந்தி படத்தின் வினியோகஸ்தர் அண்ணன் உதயநிதி தான். வரிசையாக இந்தி மொழியை தியேட்டரில் திணிப்பது திமுக தான். இந்தி நடிகைகளை கொண்டு வந்து தமிழக நடிகைகளை காலி செய்வதும் திமுக தான்.
சகோதரிகளின் இடுப்பை பற்றி ஆபாசமாக பேசிய திண்டுக்கல் லியோனிக்கு தமிழக அரசு கொடுத்த வெகுமதி, தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் பதவி.
நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் புதிதாக மொழிகளையெல்லாம் சட்டப்பேரவையில் கண்டுபிடிக்கிறார். தமிழில் மட்டும் பேச மாட்டார்.
திமுக நிர்வாகிகள் நடத்துகிற பள்ளிகளில் மூன்று மொழிகள் கற்பிக்கப்படுகிறது. ஆனால் தமிழ் பள்ளிகளில் இரண்டு மொழிகள் தான் கற்பிக்கப்படுகிறது.
திமுக நடத்திய போராட்டத்தில் மாணவரணி வைத்திருந்த பெயர் பலகைகளில் தமிழை கொன்று விட்டார்கள். கோவை சம்பவம் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினால் சிறுபான்மையினர் ஓட்டுக்கள் கிடைக்காது என்பதால், கோவை சம்பவம் குறித்து அவர் பேசவில்லை. தற்கொலைப்படை தாக்குதலை சிலிண்டர் விபத்து என்று கூறுவது வெட்கக்கேடு. தமிழகத்தில் இனி திமுகவின் மத அரசியலும், ஜாதி அரசியலும் எடுபடாது.” என்று பேசினார்
செல்வம்
சென்னை சிறுவன் கடத்தல்: சமயோசிதமாக தப்பித்தது எப்படி!
T20 WorldCup 2022: சூர்ய குமார் யாதவுக்காக விட்டுகொடுத்த விராட் கோலி