பாஜக ஐடி விங் செயலாளர் திலிப் கண்ணன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
பாஜக ஐடி விங் தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார் நேற்று (மார்ச் 5) பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகினார். விலகியது மட்டுமல்லாமல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
குறிப்பாக ”கடந்த ஒன்றரை ஆண்டுகளாகத் தமிழக பாஜக தலைமை தொண்டர்களையும் கட்சியையும் செருப்பாக பயன்படுத்தி கட்சியைப் பற்றி துளியும் சிந்திக்காது, சொந்த கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் வேவு பார்த்து ஆனந்தம் அடைவதைப் போன்ற அல்பத்தனம் எதுவும் இல்லை” என்று கூறியிருந்தார்.
மேலும் பாஜகவில் இருந்து விலகிய நிர்மல் குமார் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார்.

இந்நிலையில், பாஜக ஐடி விங் செயலாளர் திலீப் கண்ணன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இந்த முடிவு குறித்து திலீப் கண்ணன், “கனத்த இதயத்துடன் எழுதுகிறேன்..
இந்த வார் ரூம் சுவர் இன்னும் எத்தனை பேரை காவு வாங்க போகுதோ? தான் பதவிக்கு வரும் போது 500 தலைவர்களை உருவாக்குவேன் என்று சொல்லி பதவி ஏற்றார் அண்ணாமலை.
பதவியேற்ற 20 மாதத்தில் எத்தனை தலைவர்களை உருவாக்கினார்..?? இறைவனுக்கே வெளிச்சம்.
ஒருத்தருக்கு கூட மீடியா வெளிச்சம் வந்திட கூடாதுனு தொலைக்காட்சி விவாதங்களுக்கு செல்லவிடாமல் இவர் மட்டும் பேட்டி கொடுத்து இன்றுவரை சீன் போட்டுட்டு இருக்கார்.
தன்னை சுத்தமானவர் நேர்மையானவர்னு சொல்கிற நபர் ஏன் ஆருத்ரா நிதி நிறுவன மோசடி கும்பலை கட்சியில் வைத்துள்ளார். தன்னைவிட டெல்லி அளவில் பெரிய செல்வாக்கு உள்ள தமிழக பாஜக முகமாக இருந்தார் கே.டி.ராகவன் அவரை முதலில் காலி செய்தார். (அவர் மீது இதுவரை எந்த பெண்ணும் புகார் அளிக்கவில்லை).
அடுத்து பேராசிரியர் சீனிவாசன் மாநில பொதுச்செயலாளர் மொத்தம் நான்கு பொதுசெயலாளர்கள் அவர்களில் மூவருக்கு பெருங்கோட்ட பொறுப்பாளர் கொடுத்துவிட்டு, தன்னைவிட அறிவாளியான பேராசிரியர் சீனிவாசனுக்கு மட்டும் பெருங்கோட்ட பொறுப்பாளர் கொடுக்கவில்லை.
அடுத்து பொன்.பாலகணபதி மாநில பொதுச்செயலாளர் அவருக்கு சின்ன பிரச்சினை வருது. சசிகலா புஷ்பா, நான் மீடியாவில் அவர் மீது தவறு இல்லை என்று பேட்டி கொடுக்கிறேன் என்ற போது அவரை தடுத்து பொன்.பாலகணபதியை அசிங்கப்படுத்தினார்.
அடுத்து நைனார், அவரை இவர்கள் இதுவரை ஒரு மனிதனாக கூட மதித்தது இல்லை. மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகளை தனது அறையில் உள்ளே வைத்துக்கொண்டு போலீஸ் தோரணையில் ஏளானமாக பேசுவது.
இவர் வந்து தான் எல்லாம் கிழிச்ச மாதிரி எல்லாம் கம்பு சுத்துறாங்க. இவர் இடத்தில் ஒரு பொம்மை வந்திருந்தாலும் பாஜக தொண்டன் தூக்கி கொண்டாடிருப்பான். பாஜக தொண்டனை கைது செய்துவிட்டார்கள்னு செய்தி அனுப்பினால் அவன் ஏன் இப்படி பதிவு போட்டான்னு திருப்பி கேள்வி கேட்கிறது, அவனுக்கு எந்த சட்ட உதவியும் செய்யறது இல்ல.
சட்ட உதவி செய்கிறவனை ஏன் செய்கிறனேனு மிரட்டல் விடுறது.
பாஜக தலைவராக முருகன் இருக்கும் போது மாற்று கட்சியில் இருந்து மிக முக்கிய தலைவர்களை எல்லாம் கொண்டு வந்து கட்சியில் இணைத்தார்.
அண்ணாமலை வந்து அப்படி யாரையாவது கட்சியில் இணைத்த நிகழ்வு உண்டா? சொந்த கட்சியில் இத்தனை வருடம் உழைத்தவனை வேவு பாப்பது இந்த புனிதரின் வேலை போல.
நான் சொன்னது உண்மையா பொய்யா என்பது கட்சியின் உள்ளே இருக்கும் 90% நிர்வாகிகளுக்கு தெரியும், வெளியில் உள்ள சோசியல் மீடியா நண்பகளுக்கு அவர் புனிதராக தான் தெரிவார்.
இன்னும் இந்த வார் ரூம் கோஸ்டிகள் என்னைப்போல எத்தனை பேரை வெளியே அனுப்ப போகிறது என்று பொறுத்திருந்து பாருங்கள்.
இதுவரை இந்த கட்சிக்கு என்னால் முடிந்த அளவிற்க்கு 100% உழைத்திருக்கேன்.
இத்தனை காலம் என்னோடு பயணித்த பாஜக ஆதரவாளர்கள், பாஜக நண்பர்கள், பாஜக அனுதாபிகள் அனைவருக்கும் மிக்க நன்றி. கனத்த இதயத்துடன் விடைபெறுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
நேற்று தான் நிர்மல் குமார் விலகிய நிலையில் இன்று மற்றொரு நிர்வாகி பாஜகவை விட்டு வெளியேறி இருப்பது பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மோனிஷா
Comments are closed.