பதவி விலகிய ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே மீண்டும் நிதிஷ்குமார் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
பாஜக உடனான கூட்டணியை முறித்துக் கொண்டதாக அறிவித்த பிறகு இன்று (ஆகஸ்ட் 9) மாலை 4 மணிக்கு நிதிஷ்குமார் ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
அதன்பிறகு ஆர்.ஜே.டி. தலைவர் தேஜஸ்வி யாதவுடன் சென்று லாலு பிரசாத்தின் மனைவி ராப்ரி தேவியை சந்தித்தார். இதையடுத்து பாட்னாவில் ஆர்.ஜே.டி, ஐக்கிய ஜனதா தளம் எம்.எல்.ஏ-க்களின் கூட்டுக் கூட்டம் நடைபெற்றது.
அதில் நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். 243 உறுப்பினர்களைக் கொண்ட பிகார் சட்டமன்றத்தில் 79 எம்.எல்.ஏ-க்களுடன் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி தனிப்பெரும்பான்மை கொண்டதாக இருக்கிறது.
ஐக்கிய ஜனதா தளத்திற்கு 45 எம்.எல்.ஏ-க்களும், காங்கிரசுக்கு 19 எம்.எல்.ஏ-க்களும் உள்ளனர். மேலும் இடதுசாரி கட்சிகளும் நிதிஷ்க்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் மொத்தம் 160 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதத்துடன் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதத்துடன் நிதிஷும், தேஜஸ்வியும் இணைந்து ஆளுநரை சந்தித்தனர்.
ஆளுநர் அழைப்பு விடுத்ததும் நிதிஷ்குமார் முதலமைச்சராக பதவியேற்பார் என்று தெரிகிறது.
–கலை.ரா