முதுநிலை நீட் தேர்வு எழுதினாலே மருத்துவ படிப்பில் சேரலாம் என்பதால் நீட் தேர்வின் பலன் பூஜ்யம் என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு தமிழகத்தில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக அரசு மருத்துவக் கல்லூரிகளில் மீதமுள்ள 50 சதவீத இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மாநில அரசுக்கான இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (டிஎம்இ) நடத்தும் மாநில கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் 7 ம் தேதி தொடங்கியது. இரண்டு சுற்றுக் கலந்தாய்வு நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு அதிக இடங்கள் காலியாக உள்ளதால், அவற்றை நிரப்புவதற்காக நீட் தகுதி மதிப்பெண்ணை பூஜ்ஜியமாக மருத்துவக் கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பால் நீட் தேர்வின் பலன் பூஜ்ஜியம் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இது குறித்து இன்று (செப்டம்பர் 21) அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
“நீட் தேர்வின் பலன் பூஜ்ஜியம் என்று மத்திய பாஜக அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. முதுநிலை நீட் கட் ஆஃபை பூஜ்ஜியமாக குறைப்பதன் மூலம் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் தகுதி என்பது அர்த்தமற்றது என்பதையும் அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.
The Union BJP Government has accepted that benefit of #NEET is #ZERO!
By reducing the NEET PG cut-off to 'zero', they are accepting that 'eligibility' in National 'Eligibility' Cum Entrance Test is meaningless. It's just about coaching centres and paying for the exam. No more…
— M.K.Stalin (@mkstalin) September 21, 2023
பயிற்சி மையங்களில் பணம் செலுத்துவதற்கு மட்டும் தான் நீட் உதவுகிறது. நீட் தேர்விற்கு எந்த தகுதியும் இல்லை.
நீட் = 0. நீட்டுக்கும் தகுதிக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதை தான் நாம் காலம் காலமாக சொல்லி வருகிறோம். இது வெறும் சம்பிரதாயமாக மாறிவிட்டது.
விலைமதிப்பற்ற பல உயிர்கள் பலியாகியும் மனம் தளராத மத்திய பா ஜ க அரசு, தற்போது இப்படி ஒரு உத்தரவை கொண்டு வந்துள்ளது. நீட் என்ற கில்லட்டின் மூலம் உயிரிழப்புகளை ஏற்படுத்தியதற்காக பாஜக அரசை அகற்ற வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மோனிஷா
காவிரி விவகாரம்: மத்திய அமைச்சரை சந்தித்த கர்நாடக முதல்வர்
தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!