திமுக எம்.எல்.ஏ. உயிருக்குக் குறி?

Published On:

| By Aara

நேற்று ஜூலை 9 ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் கடலூர்- சிதம்பரம் சாலையில் அமைந்துள்ள தினத்தந்தி அலுவலக வளாகத்தில் மர்ம நபர் ஒருவர் பைக்கில் வந்து அங்குள்ள ’வேஸ்ட்’களை எடுத்து தீ வைத்துவிட்டு தப்பித்துவிட்டார். இது மாவட்டத்தை பரபரப்பாக்கியது.

அதே நாள் ஜூலை 9 ஆம் தேதி மாலை, கடலூர் ஒன்றியம் நல்லாத்தூரில் உள்ள கிருஷ்ணா  மண்டபத்தில் திமுக நிர்வாகி மணிவண்ணன் மகள் எழிலரசிக்கு மஞ்சள் நீராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த விழாவில்  கலந்துகொள்வதற்காக  இரவு 7. 40 மணிக்கு கடலூர் தொகுதி திமுக எம். எல். ஏ. ஐயப்பன் மண்டபத்துக்கு வந்தார். மேடைக்கு சென்று வாழ்த்தி பரிசு கொடுத்துவிட்டு,  அதன் பிறகு 8.00 மணியளவில் முதல் தளத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
Beer bottle bomb to threaten DMK MLA
அந்த நேரத்தில்  மண்டப வாசலில் ஐஸ் கிரீம் வழங்கிக்கொண்டிருந்த இடத்தில் ’5000’ பீர் காலி பாட்டிலில் கொஞ்சம் மண்ணெண்ணெயை ஊற்றி அந்த பாட்டில் மீது துணியைச் சுற்றி வீசியுள்ளனர். அப்போது உடனடியாக  அதை யாரும் கவனிக்கவில்லை.
சில நிமிடங்கள் கழித்து  எம்.எல்.ஏ. ஐய்யப்பனுடன் சாப்பிட்டுவிட்டு கீழே வந்தவர்கள்தான் பீர் பாட்டில் உடைந்து கிடப்பதையும்,  மண்ணெண்ணெய் வாடை வருவதையும் கவனித்துள்ளனர். உடனே போலீஸுக்கும் தகவல் சொல்லிவிட்டனர்.
அதுமட்டுமல்ல, ‘திமுக எம்.எல்.ஏ.வை குறிவைத்துதான் இந்த பாட்டில் குண்டு வீசப்பட்டிருக்கிறது’ என்றும் தகவலைப் பரப்பிவிட்டனர். உடனே  அங்கே கிடந்த இந்த பீர் பாட்டில் குண்டு ஊடகங்களில் வேகமாக பற்றிக் கொண்டது.
எம்.எல்.ஏ. அய்யப்பனை மையமாக வைத்து நேற்று இரவு கிளம்பிய தகவலால்  எஸ்பி ராஜாராம், கடலூர் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, டிஎஸ்பி என அனைவரும் மண்டப வாசலில் குவிந்தனர். தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
“யாரோ திட்டமிட்டு மிரட்டும் வகையில் இந்த தீயச்செயலைச் செய்துள்ளனர். இந்த  சூழ்ச்சியை யார் செய்தார்கள் என்ற உண்மையை வெளிப்படுத்துவோம்” என்கிறார்கள் போலீஸார்.
வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel