கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளி பாஷா இறுதி ஊர்வலத்துக்கு போலீஸார் அனுமதி வழங்கியதைக் கண்டித்து, பாஜக நாளை (டிசம்பர் 20) கருப்பு தின பேரணி, ஊர்வலம் நடத்த உள்ளது. இது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அல் உம்மா இயக்கத்தின் தலைவராக அறியப்படும் பாஷா தனது ஆரம்ப காலத்தில் ரியல் எஸ்டேட் துறையில் கொடிகட்டி பறந்தவர். 43 வருடங்களுக்கு முன்பு கோவையில் திராவிடர் கழகம் நடத்திய பட்டிமன்றத்தில் கலந்துகொண்டு வீடு திரும்பிய போது, இந்து முன்னணியினருக்கு எதிராக குண்டுவீசி முதல் வழக்கை பெற்றார்.

1997-ஆம் ஆண்டு கோவையில் ஏற்பட்ட கலவரத்தில் 18 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். அந்த பதற்றம் ஓய்வதற்குள், 1998 பிப்ரவரி 14 ஆம் தேதி, பாஜக தலைவர் அத்வானி கோவை வந்த அன்று, கோவையில் அடுத்தடுத்து 12 பகுதிகளில் குண்டுகள் வெடித்தன.
இதில் 56 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் படு காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு திட்டமிட்டதாக கைது செய்யப்பட்டார் அல் உம்மா அமைப்பின் தலைவர் எஸ்.ஏ. பாஷா. நீதிமன்ற விசாரணையில் பாஷா உள்ளிட்ட 13 பேருக்கு ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டது.
சுமார் 30 ஆண்டுகள் பாஷா கோவை மத்திய சிறையில் இருந்த பாஷா, சமீபத்தில் பரோலில் வந்தார். உடல்நல பாதிப்பால் அவர் கடந்த சில மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 16ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மமக தலைவர் ஜவாஹிருல்லா, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்.
மேலும் சீமான், விசிக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு ஆகியோர் பாஷா உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். பாஷா குறித்து அவர்களின் பேச்சையும் மத்திய, மாநில அரசின் உளவுத்துறை உன்னிப்பாக கவனித்து வந்தது.

இதற்கிடையே பாஷாவின் உடலை இறுதி ஊர்வலமாக எடுத்துச் சென்று அடக்கம் செய்ய அவரது உறவினர்களும் ஆதரவு அமைப்பினரும் முடிவு செய்தனர். கோவை நகர பகுதி வழியாக இந்த ஊர்வலத்தை அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், டிராபிக் துணை ஆணையர் அசோக் குமார் ஆகியோர் ‘அந்த வழியில் இந்துக்கள் அதிகம் உள்ளதால் பிரச்சனைகள் வரும். அதனால் புல்லுக்காடு, லிங் ரோடு, வின்செண்ட் தெரு, பழைய மேம்பாலம் வழியாக திப்பு சுல்தான் மசூதிக்கு எடுத்து செல்லவேண்டும். யாரும் நடந்து போகக்கூடாது என்று அழுத்தமான உத்தரவுகளை பிறப்பித்து பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினர்.
இஸ்லாமிய அமைப்பினரும் இறுதி சடங்குகளில் கலந்துகொண்ட மாற்றுக் கட்சியினரும் போலீஸ் காட்டிய வழியில் டூவிலர் மற்றும் காரில் நான்கரை கி.மீ கடந்து சென்று அடக்கம் செய்தனர். அப்போது சிறுசத்தம் கூட இல்லாமல் சென்றனர்’ என்றார்கள் காவல்துறையினர்.
இந்தநிலையில், குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியை ஒரு தியாகி போல் சித்தரிப்பது ஏன் என்று பாஜகவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தொடர்ந்து பாஷாவின் இறுதி ஊர்வலத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நாளை (டிசம்பர் 20) தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் 4 கி.மீ தூரத்துக்கு கருப்பு தின ஊர்வலம் நடத்த உள்ளதாக அறிவிப்பு வெளியானது. எனினும் போலீசார் அதற்கு இப்போது வரை அனுமதி கொடுக்கவில்லை.

இதுதொடர்பாக நேற்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை பேசுகையில், “அல் உம்மா என்பது ஒரு தடை செய்யப்பட்ட இயக்கம். பாஷா ஊர்வலத்திற்கு காவல்துறை மறைமுக அனுமதி அளித்துள்ளது. பாஷா என்ன தியாகியா?
பாஷா ஊர்வலத்தில் சீமான் கலந்து கொண்டிருக்கிறார். அரசியல்வாதிகள் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும். வரும் வெள்ளியன்று பாஷா ஊர்வலத்திற்கு எதிராக நடைபெறும் பாஜகவின் கருப்புக்கொடி பேரணிக்கு போலீஸார் எவ்வளவு தடைகளை ஏற்படுத்துவார்கள் என்று பாருங்கள். ஆனால் கோவை மக்கள் இதையெல்லாம் புரிந்துகொள்ள வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.
அண்ணாமலையின் இந்த பேச்சையடுத்து, ’இறந்தவரின் உடலை சாலையில் எடுத்துச் செல்லாமல், ஹெலிகாப்டரில் கொண்டு சென்றா அடக்கம் செய்ய முடியும்? என கேள்வி எழுப்பியுள்ளார் இந்திய தேசிய முஸ்லீக் லீக் கட்சி தலைவர் ரஹீம்.
1998 ஆம் ஆண்டு 50 பேரை பலி கொண்ட கோவை குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்று 27 ஆண்டுகள் ஆனாலும் அதன் வடுக்கள் இன்னும் மறையவில்லை. இந்த நிலையில் பாஷா இறுதி ஊர்வலத்திற்கு எதிராக பாஜக நாளை மேற்கொள்ளும் கருப்பு தின ஊர்வலத்தால் கோவை மீண்டும் பரபரப்பாகியுள்ளது.
இதனையடுத்து முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் 2000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர். பாஜகவினரின் மூவ்களை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
அமித் ஷாவுக்கு எதிராக போராட்டம் : பாஜக எம்.பி. காயம்… ராகுல் குற்றச்சாட்டு!
’கழிவுகள் கொட்டப்படுவதை எதிர்க்கக் கூட தெம்பில்லை’ : ஸ்டாலினை விமர்சித்த எடப்பாடி
Comments are closed.