30 ஆண்டுகளுக்குப் பிறகு பாபர் மசூதி தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் அனைத்தையும் உச்சநீதிமன்றம் முடித்து வைத்திருக்கிறது.
1992 ஆம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது.
இதனை அடுத்து நாடு முழுவதும் ஏற்பட்ட கலவரத்தால் பலர் கொல்லப்பட்டனர். கோடிக்கணக்கிலான பொது சொத்துகளும், தனியார் சொத்துகளும் சேதப்படுத்தப்பட்டன. மனித உரிமை மீறல்களும் அரங்கேறின.
இந்நிலையில் பாபர் மசூதி இடிப்பு தொடர்பான நீதிமன்ற உத்தரவுகளை, வழிகாட்டல்களை மீறியதாக பாஜகவைச் சேர்ந்த உமாபாரதி, முரளி மனோகர் ஜோஷி, சாத்வி ரிதம்பரா, வினய் கட்டியார் உள்ளிட்ட பலர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தொடுக்கப்பட்டன.
பல ஆண்டுகளாக அது விசாரிக்கப்படாமல் நிலுவையிலேயே இருந்து வந்தன. இந்த வழக்குகள் இன்று(ஆகஸ்ட் 30) உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தன.
அப்போது, “கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் ஒன்பதாம் தேதி பாபர் மசூதி அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விரிவான தீர்ப்பு வழங்கி விட்டது. இந்நிலையில் மீண்டும் இந்த வழக்குகளை விசாரிக்க அவசியப்படவில்லை. மனுவை தாக்கல் செய்த மனுதாரர் கூட இறந்துவிட்டார். எனவே இது தொடர்பான அனைத்து வழக்குகளையும் முடித்து வைக்கிறோம்” என்று உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது,
கலை.ரா