திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்பீர் சிங்கை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் இன்று (மார்ச் 29) சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
பெரம்பூர் தெற்கு அதிமுக பகுதி செயலாளர் இளங்கோவன் கொலை தொடர்பாகவும், அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்பீர் சிங் விசாரணை கைதிகள் பல்லை பிடுங்கியதாக எழுந்த புகார்கள் தொடர்பாகவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார்.
இதற்கு முதல்வர் ஸ்டாலின் அளித்த விளக்கத்தில், “அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி விவகாரத்தைப் பொறுத்தவரைக் குற்றச்செயல்களில் ஈடுபட்டு விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களில் சிலரது பற்களைச் சேதப்படுத்தியதாகக் குற்றச்சாட்டு வந்ததும் சேரன்மாதேவி சார் ஆட்சியர், உட்கோட்ட நடுவர் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது.
அந்த ஏஎஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். காவல்நிலையங்களில் எந்த மனித உரிமை மீறல் சம்பவங்கள் நடந்தாலும் அதில் எந்த விதமான சமரசங்களையும் இந்த அரசு மேற்கொள்ளாது என்பதை இந்த அவையில் நான் ஏற்கனவே தெரிவித்து இருக்கிறேன்.
அந்தவகையில் தற்போது விரும்பத் தகாத சம்பவத்தில் ஈடுபட்ட அம்பாசமுத்திர ஏஎஸ்பியை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டிருக்கிறேன்.
மேலும், முழுமையான விசாரணை அறிக்கை வந்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
அதுபோன்று அதிமுக பகுதி செயலாளர் இளங்கோவன் கொலை குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், இவ்விவகாரத்தில் 5 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்துத் தொடர்ந்து புலன் விசாரணை நடந்து வருகிறது என்று கூறினார்.
பிரியா
நாடாளுமன்ற பொது கணக்குக் குழு தேர்தல்: திருச்சி சிவா முதலிடம்!