ஆம்ஸ்ட்ராங் கொலை : கைதான அஞ்சலை, ஹரிதரன் சிறையில் அடைப்பு!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் தாதா அஞ்சலை மற்றும் அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் இருவரும் சிறையிலடைக்கப்பட்டனர்.
சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் திமுக, அதிமுக, பாஜக என என பல்வேறு கட்சியை சேர்ந்த வழக்கறிஞர்கள் மற்றும் ரவுடிகள் என 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே போலீஸ் காவலில் இருந்த ரவுடி திருவேங்கடம் தப்பிச் செல்ல முயன்ற நிலையில் போலீசாரால் என்கவுன்டர் செய்யப்பட்டார்.
போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில் தலைமறைவாக இருந்த சென்னை புளியந்தோப்பை சேர்ந்த பெண் தாதா அஞ்சலையை தனிப்படை போலீசார் 19ஆம் தேதி கைது செய்தனர். இதனையடுத்து அவர் பாஜக கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.
தொடர்ந்து புளியந்தோப்பு பகுதியில் உள்ள அவரது வீட்டை சோதனையிட்ட போலீசார் அங்கிருந்த 5 செல்போன்கள், பென்டிரைவ் பேங்க் பாஸ்புக், லேப்டாப் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
தொடர்ந்து நேற்று இரவு எழும்பூர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அஞ்சலையை ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.
தொடர்ந்து இவ்வழக்கில் தொடர்புடையதாக 16வது குற்றவாளியாக கடம்பத்தூர் ஒன்றிய அதிமுக கவுன்சிலரான ஹரிதரன் திருவள்ளூரில் நேற்று கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் கொலைக்கு பயன்படுத்திய செல்போன்கள் வெங்கத்தூர் கூவம் ஆற்றிலிருந்து மீட்கப்பட்டன.
மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ஹரிதரனை அதிமுகவில் இருந்து நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
இதனைத்தொடர்ந்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஹரிதரன் தற்போது பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
வங்கதேச வன்முறை: காரணம் இதுதான்… முழு விவரம்!