தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று (ஜூன் 12) டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “தமிழகத்தில் உள்ள அனைத்து நிர்வாகங்களிலும் ஊழல் மலிந்துள்ளது. ஊழல் குற்றச்சாட்டில் ஈடுபட்ட முன்னாள் முதலமைச்சர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட்டுள்ளனர். ஊழலில் தமிழகம் தான் முதலில் உள்ளது” என்று தெரிவித்திருந்தார்.
அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இன்று கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார், செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்திருந்தனர்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக, கூட்டணிக் கட்சி விரும்புவதை எல்லாம் நாங்களும் கூற வேண்டும் என்று எதிர்பார்ப்பது பொருத்தமற்றது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர் கூட்டத்தில் எனக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிகிறேன்.
அது மட்டும் அல்லாது நேற்று மற்றும் இன்று காலை, முன்னாள் தமிழக அமைச்சர்கள் சிலர் நான் ஆங்கில நாளேடுக்கு கொடுத்த பேட்டியை சரிவர புரிந்து கொள்ளாமல் எனக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.
அவர்களைப் போல் தரம் தாழ்ந்த விமர்சனங்களை முன்வைக்க நான் விரும்பவில்லை. ஆனால் அவர்களுக்கும், தமிழக மக்களுக்கும் தமிழக பாஜக சகோதர சகோதரிகளுக்கும் சிலவற்றைத் தெளிவுபடுத்துவது எனது கடமையாக உணர்கிறேன்.
தமிழகத்தில் ஊழல் தான் முக்கியப் பிரச்சினை. இத்தனை ஆண்டு காலம் ஒவ்வொரு குடிமக்களையும் சென்று சேர வேண்டிய நலத் திட்டங்கள், அரசியல்வாதிகளால் சுரண்டப்பட்டு, இறுதியில் பொதுமக்களுக்கு முழுமையாகச் சென்று சேர்ந்ததே இல்லை.
மக்களுக்கான நலத் திட்டங்களை இயற்றுவதை விட்டுவிட்டு, அதன் மூலம் சிலர் மட்டும் எவ்வாறு பயனடையலாம் என்ற நோக்கத்திலேயே திட்டங்கள் உருவாக்கப்பட்டு வந்திருக்கின்றன.
இத்தனை ஆண்டுகளில், அடித்தட்டு மக்கள் தங்கள் நிலையிலிருந்து ஒரு படி முன்னேறியிருக்கிறார்களா என்றால் இல்லை என்பதே பதில். தேர்தல் வாக்குறுதிகளில் இலவசமும், தேர்தலின்போது பணமும் கொடுத்தால் போதும், அடுத்த ஐந்து ஆண்டுகளும் இந்த மக்களைச் சூறையாடலாம் என்ற எண்ணத்திலேயே ஆட்சி செய்து வந்திருக்கிறார்கள்.
ஏழை எளிய மக்களை எப்போதும் கையேந்தி நிற்கும் நிலையிலேயே வைத்திருக்க விரும்புகிறார்கள். இந்த வகையான அரசியலை நான் வெறுக்கிறேன்.
பிரதமர் மோடியின் நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தவன் நான். ஏழை எளிய மக்களின் மேம்பாட்டிற்காக தொடர்ந்து உழைக்கும் அந்த ஒற்றை மனிதரின் வழியில், தமிழகத்தில் நேர்மையான, மக்கள் நலனுக்கான அரசியலை முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறேன்.
அந்த ஒற்றை எண்ணத்துடன், இன்று மட்டும் அல்ல என்றுமே எனது அரசியல் பயணம் தொடரும் என்பதை தமிழக மக்களுக்கு தெரிவித்துக் கொள்ள கடமை பட்டுள்ளேன். ஊழலின் தலைநகரம் தமிழகம் என்ற போக்கினை மாற்றி ஊழலற்ற நல்லாட்சி வழங்கிட வேண்டும் என்பதே எனது ஒற்றை ஆசை மற்றும் லட்சியம் ஆகும்.
கூட்டணிக் கட்சியையும், கூட்டணித் தலைவர்களையும் நடத்தும் விதம் குறித்து எனக்கு யாரும் எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. கூட்டணி தர்மம் நன்கு உணர்ந்தவன் நான். தமிழக அரசியல் வரலாற்றில் நடந்திருப்பதைக் கூறியிருக்கிறேன்.
ஆங்கில நாளேடுக்கு நான் கொடுத்திருந்த பேட்டியில், உண்மைக்குப் புறம்பாக ஏதேனும் கூறியிருந்தேன் என்று யாராவது நினைத்தால், அந்தத் தவறைச் சுட்டிக் காட்டித் தெளிவுபடுத்தினால், அதனை ஏற்றுக்கொள்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. அதே சமயம், கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக, கூட்டணிக் கட்சி விரும்புவதை எல்லாம் நாங்களும் கூற வேண்டும் என்று எதிர்பார்ப்பது பொருத்தமற்றது.
எனது மனசாட்சிப்படிதான் இங்கு அரசியல் செய்ய வந்துள்ளேன். அடுத்த இருபது முப்பது வருடங்களில், தமிழகம் எவ்வாறு முன்னேறியிருக்க வேண்டும், தமிழக மக்கள் வாழ்க்கை எவ்வாறு மேம்பட்டிருக்க வேண்டும், தமிழக இளைஞர்கள், மாணவர்கள் எந்த உயரத்தை அடைந்திருக்க வேண்டும் என்பதை நோக்கித் தான் எனது அரசியல் பயணம் இருக்குமே அன்றி, குறுகிய கால லாப நோக்கங்களுக்காக, இன்றும் நாளையும் கிடைக்கும் தற்காலிக வெற்றிகளுக்காக, தமிழகத்தின் எதிர்காலம் குறித்த எனது கனவுகளை, கொள்கையை அடமானம் வைக்க எனக்கு விருப்பமில்லை.
இன்றைய தினம், தமிழக அரசு தலைமைச் செயலகத்தில், பதவியில் உள்ள அமைச்சர் ஒருவரின் அறையில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில், மத்திய புலனாய்வு அமைப்புகளின் சோதனை நடைபெறுவது இது முதல் முறை அல்ல.
இதற்கு முன்பு கூட தலைமைச் செயலகத்தில் சோதனை நடைபெற்றிருக்கிறது. தமிழக அரசியலில் மலிந்திருக்கும் ஊழல், தமிழகத்திற்குக் கொண்டு வந்த மாபெரும் இழிவு, வேறு எந்த மாநிலத்திலும் நடக்காத அவல நிலை இது. அடிமட்டம் வரை ஊழலில் ஊறிப்போய் இருக்கும் இந்த அரசியல் போக்கைத்தான் மாற்ற விரும்புகிறேன்.
எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்ற போக்கினால், அரசியல் மேல் தமிழக மக்கள் நம்பிக்கை இழந்து இருந்தனர். நேர்மையான அரசியலை, நல்லதொரு மாற்றத்தை எதிர்பார்த்து வெகுகாலம் காத்துக் கொண்டிருந்த நம் மக்களுக்கு பிரதமர் மோடியின் நல்லாட்சி, அரசியல் மேல் நம்பிக்கையை மீட்டுக் கொடுத்திருக்கிறது. ஊழலற்ற அரசு சாத்தியம் என்பதை உணரத் தொடங்கியிருக்கிறார்கள்.
அவர்கள் நம்பிக்கை வீண் போகாது, தமிழகத்தில் ஊழலற்ற, மக்கள் நலன் ஒன்றே சார்ந்த அரசு அமையும். அதை நோக்கியே எங்கள் அரசியல் பயணமும் தொடரும். ஏழை எளிய மக்களின் குரலாக என் குரல் என்றும் ஒலிக்கும்” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
செல்வம்
தலைமை செயலகத்தில் ரெய்டு: ஸ்டாலின் கண்டனம்!
“செந்தில் பாலாஜிக்கு என்னாச்சு?” – ஆர்.எஸ்.பாரதி கேள்வி!

Comments are closed.