சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (டிசம்பர் 27) தனது வீட்டின் முன்பு சாட்டையால் அடித்துக்கொண்டு கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழக பாஜக சார்பில் நேற்று (டிசம்பர் 26) வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், பாஜக துணை தலைவர் கரு.நாகராஜன் உள்ளிட்ட 417 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்தநிலையில், நேற்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து சாட்டையடி போராட்டத்தை அறிவித்தார். மேலும், திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு போட மாட்டேன் என்றும் தெரிவித்தார்.

இந்தநிலையில், கோவை காளப்பட்டியில் உள்ள தனது வீட்டின் முன்பாக அண்ணாமலை எட்டு முறை தன்னைத் தானே சாட்டையால் அடித்துக்கொண்டார். ஒன்பதாவது முறை சாட்டையால் அடிக்க முற்பட்டபோது, அருகில் இருந்த பாஜக நிர்வாகி ஓடிப்போய் அண்ணாமலையை கட்டிப்பிடித்து சாட்டையடி போராட்டத்தை நிறுத்தினார்.
மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து, தமிழகம் முழுவதும் இன்று மாவட்ட தலைநகரங்களில் பாஜக ஆர்ப்பாட்டத்தை அறிவித்திருந்தது. இந்தநிலையில், மன்மோகன் சிங் மறைவை ஒட்டி ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பாலியல் வன்கொடுமை… அதிமுக, பாஜக போராட்டம்: தமிழிசை, ஜெயக்குமார் மீது வழக்கு!
மன்மோகன் சிங் மறைவு… கருப்பு பட்டை அணிந்து விளையாடும் இந்திய அணி!