“திமுக என்னை மிரட்டிப் பார்க்க முடியாது. ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்ட நான் ஒன்றும் இயேசு கிறிஸ்து அல்ல” என்றும் பாஜக தலைவர் அண்ணாமலை திமுக குறித்து கடுமையாக பேசியுள்ளார்.
![annamalai press meet](https://storage.googleapis.com/minnambalam_bucket/wordpress-1398824-5190649.cloudwaysapps.com/wp-content/uploads/WhatsApp-Image-2022-09-01-at-3.07.17-PM-1-1.jpeg)
பூலித்தேவர் 307-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (செப்டம்பர் 1) சென்னயில் அவரது உருவப் படத்திற்கு பாஜக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை, “திமுக ஆட்சி அமைந்தவுடன் முதன் முதலில் அறிஞர் அண்ணா அவர்கள் விநாயகர் சதுர்த்தி நிகழ்விற்கு அரசு விடுமுறை அளித்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காத போது அவர் தான் மத அரசியல் செய்கிறார் என்பது ஊர்ஜிதமாகியுள்ளது.
மதுரையில் செருப்பு வீச்சு சம்பவத்திற்கு அண்ணாமலை தான் காரணம் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
அப்படி செருப்பு வீசுவதற்கு நான் காரணமாக இருந்தால் அந்த செருப்புக்குக் கூட ஒரு தரம் இருக்கிறது. அந்த தரத்திற்கு கூட நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஈடாக மாட்டார் என்று நான் சொல்லியிருந்தேன்.
நான் சொன்னதில் எந்த ஒரு தவறும் கிடையாது. அவர் எப்பொழுதும் தனது தாத்தா மற்றும் தந்தையாரை வைத்து அரசியல் செய்கிறார்.
![annamalai press meet](https://storage.googleapis.com/minnambalam_bucket/wordpress-1398824-5190649.cloudwaysapps.com/wp-content/uploads/125274921_21361bb9-3495-4b1b-8332-67895a2ceefd.jpg)
வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லாமல், பழைய சரித்திரத்தை மறைத்துவிட்டு இந்தியாவிற்கு போராடியவர்கள் போல், திமுக 2022-ல் காட்டிக்கொள்ளும் போது அவர்களுக்கு பதிலடி கொடுப்பது எங்கள் கடமை.
திமுக என்னை மிரட்டிப் பார்க்க முடியாது. நாளைக்கு காலையில் விவசாய துண்டைப் போட்டுக்கொண்டு, விவசாய நிலத்தில் போய் நான் வேலை செய்வேன்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினாலோ, நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனாலோ அதனை செய்ய முடியுமா?. நான் காலையில் காட்டில் போய் படுத்து தூங்க முடியும்.
திமுகவினர் ஏசியை அணைத்து விட்டு, உங்கள் சொகுசு கார்கள் இல்லாமல் கிராமத்திற்கு வாருங்கள் பார்க்கலாம். முதல் தலைமுறை பட்டதாரிகள் திமுகவில் எத்தனை பேர் அரசியலில் வந்திருக்கிறார்கள்?
ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்ட நான் ஒன்றும் இயேசு கிறிஸ்து அல்ல. அடித்தால் திருப்பி அடிப்பேன்.
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு பதிலடி கொடுத்ததில் எந்த தவறும் கிடையாது. கண்ணியமாக பேசி தான் பாஜகவில் தலைவர் பொறுப்பில் இருக்க வேண்டும் என்றால் எனக்கு பாஜக தலைவர் பொறுப்பே வேண்டாம்” என்று அவர் காட்டமாக பேசினார்.
செல்வம்
போதைப்பொருள் புழக்கத்துக்கு ஒன்றிய அரசே காரணம்: அமைச்சர் பொன்முடி குற்றச்சாட்டு!