மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து ட்விட்டரில் அவதூறாக கருத்து பதிவிட்ட பாஜக தொழில்பிரிவு துணை தலைவர் செல்வகுமார் கைது செய்யப்பட்டதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று(ஏப்ரல் 12)கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் காளப்பட்டியைச் சேர்ந்த செல்வகுமார், பாஜக தொழில்பிரிவு துணைதலைவராக உள்ளார்.
இவர் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து ட்விட்டரில் அவதூறாக கருத்து பதிவிட்டு வந்தார்.
நேற்று(ஏப்ரல் 11) அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
“கோவைக்கு பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜி அவர்கள் வந்த பிறகு அனைத்து விதமான போதை பொருட்கள் விற்பனையும் பலமடங்கு அதிகரிக்கபட்டு இளைஞர்களின் வாழ்வு சீரழிக்கபடுகிறது.
கஞ்சா பாலாஜி for a reason. கஞ்சா உள்பட அனைத்து போதை பொருட்களையும் தடை செய்ய வேண்டிய துறைக்கு அமைச்சராக இருந்துகொண்டு கூடுதலாக கோவை பொறுப்பு அமைச்சராகவும் இருக்கும் அமைச்சரே கோவையின் இந்த சீரழிவுக்கு காரணம்” என்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திமுகவைச் சேர்ந்த சுரேஷ்குமார் கோவை மாவட்டம் சைபர் கிரைம் போலீசில் புகார்அளித்தார்.
இதனை தொடர்ந்து செல்வக்குமார் மீது சமூக வலைதளங்கள் வழியாக வதந்திகளை பரப்பி பொதுமக்களிடம் பீதியை ஏற்படுத்துதல், தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவுசெய்து காவல்துறையினர் அவரை இன்று கைதுசெய்தனர்.
செல்வகுமார் கைது செய்யப்பட்டதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,
“தமிழக பாஜக தொழில்துறை பிரிவு மாநிலத் துணைத் தலைவர் செல்வகுமார் அவர்களைக் கைதுசெய்துள்ள திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
ஆளுங்கட்சியின் தவறுகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களைக் கைது செய்வதன் மூலம், ஆளுங்கட்சிக்கு எதிரான குரல்களை அடக்கி,
கருத்துச் சுதந்திரத்தை முடக்கி விடலாம் என்று கனவு காண்கிறது திறனற்ற திமுக அரசு இதற்கெல்லாம் அஞ்சுபவர்களில்லை பாஜக தொண்டர்கள்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்