வருண் குமார் ஐபிஎஸுக்கும் சீமானுக்கும் இடையேயான மோதல் போக்கு குறித்து அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (டிசம்பர் 6) திரூப்பூர் சென்றார். அங்கு படுகொலை செய்யப்பட்ட தெய்வசிகாமணி குடும்பத்தினரைச் சந்தித்து, அவரது மருமகளுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலையிடம், நாம் தமிழர் கட்சியை பிரிவினைவாத இயக்கம் என்று வருண் குமார் ஐபிஎஸ், டிஜிபி மாநாட்டில் கூறியிருக்கிறார். இதற்கு சீமான் ஒருமையில் பதிலளித்திருக்கிறார்’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அண்ணாமலை, “ ஐபிஎஸ் வருண் குமார் என்னுடைய பேட்ச்மேட். ஒன்றாக பயிற்சி எடுத்திருக்கிறோம். இது ஒருபக்கம்… நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் முக்கியமான அரசியல் தலைவர். டிஜிபி மாநாட்டில் நிறைய விஷயங்கள் பேசுவார்கள். நானும் நிறைய மாநாட்டில் பங்கேற்றிருக்கிறேன். ரூமுக்குள் நிறைய விஷயங்கள் பேசுவார்கள்.
அது சில நேரம் ஐபிஎஸ் அதிகாரிகளின் தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம். மாநில காவல்துறை கருத்தாக இருக்காது,
இப்போது வீடியோ வெளியே வந்ததுதான் பிரச்சினை. ஒரு அரசியல் கட்சித் தலைவராக நான் சொல்ல வேண்டுமானால், சீமான் அண்ணன் பேசுவதற்கு எல்லா உரிமையும் இருக்கிறது.
அவர் தமிழ் தேசியம் என்கிறார். நாங்கள் இந்தியா முழுவதும் தேசிய அரசியலாக பார்க்கிறோம். அதில் தமிழுக்கு முன்னுரிமை கொடுக்கிறோம். இதுதான் பாஜகவின் அரசியல்.
சீமானை பொறுத்தவரை, நான் அண்ணன் என்றுதான் சொல்லுவேன். என்னை தம்பி என்று சொல்லுவார். நிறைய விஷயங்கள் பேசுவார்.
காவல்துறை அதிகாரிகள் கருத்துகள் சொன்னாலும் கூட அது தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம், இதுதான் என்னுடைய கருத்து.
வருண் குமார் சொன்ன கருத்து தமிழக காவல்துறையின் கருத்தாக இருக்க முடியாது. பாஜகவின் கருத்தும் கிடையாது. அவரவர் அவர்களது வேலையை பார்க்க வேண்டும்” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
நள்ளிரவில் அமைச்சர் சிவசங்கருக்கு வந்த போன்… அடுத்து நடந்தது என்ன?
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்… வானிலை மையம் எச்சரிக்கை!