முடிந்தால் என் மீது இன்னொரு வழக்கையும் பதிவு செய்யுங்கள் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.
தமிழ்நாடு அமைச்சரவை மாற்றத்திற்கு பின் தமிழக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களை இன்று (மே 12) சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், ”அனைத்து துறைகளிலும் பல்வேறு தொழில் நிறுவனங்களை வைத்துள்ள குடும்பத்தைச் சேர்ந்த டி.ஆர்.பி ராஜாவுக்கு தொழில்துறையை ஒதுக்கியது ஏன்? இதில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன என்பது தெரியவில்லை.
டி.ஆர்.பாலு என் மீது அவதூறு வழக்கை தொடர்ந்துள்ளது நகைப்புக்குரியது. நான் அவர் மீது வைக்கும் குற்றச்சாட்டுகள் ஒரு சதவீதம் கூட குறையாது” என்றார்.
பிடிஆர் துறை மாற்றம்: ஏற்க முடியாது
தொடர்ந்து நிதித்துறையில் இருந்து தகவல்தொழில்நுட்பத் துறைக்கு மாற்றப்பட்டுள்ள பிடிஆர் குறித்து அண்ணாமலை பேசுகையில், ”சிறந்த நிதி அமைச்சர் பிடிஆர் தான் என பலமுறை முதல்வர் ஸ்டாலினே பாராட்டிய நிலையில் அவரை நிதித்துறையில் இருந்து மாற்றவேண்டியதன் அவசியம் என்ன?,
பிடிஆர் டேப் வெளிவந்த ஒரே காரணத்திற்காக அவரது துறையை மாற்றியது எக்காரணத்திற்கும் ஏற்றுக்கொள்ள முடியாது.” என்று தெரிவித்தார்.
முதல்வருக்கு சவால்
மேலும் அவர், “நேற்று முன் தினம் என்மீது முதல்வர் ஸ்டாலின் அவதூறு வழக்கு ஒன்றை தொடர்ந்திருக்கிறார். அவருக்கு நான் ஒரு சவால் விடுக்கிறேன்.
முதல்வர் ஸ்டாலின் மெட்ரோ நிர்வாகத்திடம் லஞ்சம் வாங்கியிருக்கிறார் என்று கூறிய அதே அண்ணாமலை தான் பிடிஆர் டேப் ஆடியோவையும் வெளியிட்டேன். அதனால் என்மீது இன்னொரு வழக்கையும் நீங்கள் பதிவு செய்ய வேண்டும்.
அப்போது தான் நீதிமன்றத்தில் நான் பிடிஆர் ஒரு மணி நேரம் பேசியுள்ள முழு ஆடியோவை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வசதியாக இருக்கும். அதில் இன்னும் பல்வேறு ரகசியங்கள் இருக்கிறது” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
Comments are closed.