பாஜக நடவடிக்கை: திமுகவை விமர்சித்த குஷ்பு!

Published On:

| By Prakash

பாஜக நிர்வாகி மீது அண்ணாமலை நடவடிக்கை எடுத்ததைப் பாராட்டியிருக்கும் நடிகை குஷ்பு, அதேநேரத்தில் திமுகவை விமர்சித்து உள்ளார்.

பாஜக பெண் நிர்வாகியிடம், ஓபிசி பிரிவு பொதுச்செயலாளராக உள்ள திருச்சி சூர்யா சிவா ஆபாசமான வார்த்தைகளால் மிரட்டல் விடுத்தது பற்றி மாநிலத் தலைவர் அண்ணாமலை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து குஷ்பு நேற்று (நவம்பர் 22) தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “நான் வன்மையான கருத்துகளால் பாலியல் ரீதியாக தாக்கப்பட்டபோது வாய்மூடி பார்வையாளர்ளாக இருந்தவர்கள் தற்போது என்னிடம் துணிச்சலாக கேள்வி கேட்பதை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது.

ஒரு பெண்ணுக்காக குரல் கொடுக்க யாருக்கும் தைரியம் இல்லை என்பது எனக்கு தெரியும். நீங்கள் அனைவரும் அரசியல் நாடகமாடுகிறீர்கள். எங்கள் தலைவர் (அண்ணாமலை) சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுத்துள்ளார். இறந்த உடலை வைத்துக்கூட கேவலமான அரசியல் செய்யும் கட்சிகளில் இருந்து வெளியேறியதில் மகிழ்ச்சி.

எங்கள் கட்சி உறுப்பினர்களுக்கு இடையே நடந்த ஆடியோ பேச்சு தொடர்பாக மாநில தலைவர் அண்ணாமலை எடுத்துள்ள நிலைப்பாட்டை பாராட்டுகிறேன். பெண்களுக்கு எதிராக பாலியல் ரீதியான கருத்துக்கள் எந்த நேரத்திலும் பொறுத்துக் கொள்ளப்படாது” என அதில் குறிப்பிட்டுள்ளார்.

திமுகவைச் சேர்ந்த சைதை சாதிக், பாஜகவைச் சேர்ந்த குஷ்பு, நமிதா உள்ளிட்ட நிர்வாகிகளை தரக்குறைவாகப் பேசியிருந்தார். இதற்கு பாஜக சார்பில் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, சைதை சாதிக் மன்னிப்பு கோரினார்.

இதனை ஏற்காத குஷ்பு, அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்த விஷயத்தில் தமக்கு ஆதரவளிக்காத காரணத்தாலேயே, அண்ணாமலை நேற்று எடுத்த நடவடிக்கையை வைத்து திமுகவை விமர்சித்துள்ளார், குஷ்பு.

ஜெ.பிரகாஷ்

பாமாயில், பருப்பு விநியோகம்: தமிழகத்தில் 40 இடங்களில் சோதனை!

வளரும் பாஜக… தேயும் அதிமுக: ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஜெ. உதவியாளர் பூங்குன்றன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.