தற்காலிக துணைவேந்தரை நியமிக்க வேண்டும்: ஆளுநருக்கு அண்ணா பல்கலை. ஆசிரியர்கள் கடிதம்!

Published On:

| By christopher

பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தொடர்ந்து தற்காலிக துணைவேந்தரை நியமிக்க வேண்டும் என இன்று (டிசம்பர் 28) ஆய்வு மேற்கொண்ட ஆளுநருக்கு அண்ணா பல்கலைக்கழகம் ஆசிரியர்கள் கடிதம் அளித்துள்ளனர்.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவியை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த சென்னை உயர்நீதிமன்றம் மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.

ஆளுநர் ஆய்வு!

இந்த நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழக ஆளுநரும், பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர்.என். ரவி இன்று ஆய்வு மேற்கொண்டார்.

மதியம் 12.30 மணியளவில் சம்பவம் நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்ட நிலையில், பல்கலைக்கழக வளாகத்திற்குள் பத்திரிகையாளர்கள் யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை.

தொடர்ந்து சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள விசாரணை குழுவினரோடு சுமார் ஒரு மணி ஆலோசனை நடத்தினார்.

அப்போது, மாணவர்கள் எழுப்பிய பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், மாணவர்களுக்கான பாதுகாப்புச் சூழலை மேம்படுத்திடவும் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு ஆளுநர் உத்தரவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இதற்கிடையே ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளது.

துணை வேந்தர் இல்லாதது வருத்தமளிக்கிறது!

அதில், ”பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது. அண்ணா பல்கலைககழக ஆசிரியர் சங்கத்தின் சார்பில் உள்ள வழக்கறிஞர்கள், இந்த சட்டப்போராட்டத்தில் துணை நிற்பார்கள்.

மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில், தற்போது விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பல்கலைக்கழக வளாகத்தில் நீண்ட நாட்களாக இருக்கும் குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஒவ்வொரு மின்விளக்குகளும் இரவு நேரத்தில் முழுமையாக எரிவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர் இல்லாதது பெரும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. கடினமான முடிவுகளை எடுப்பதற்கு மூத்த பேராசிரியர் ஒருவர், துணை வேந்தராக இல்லாதது வருத்தமளிக்கிறது. எனவே, அதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தி மூத்த பேராசிரியர் ஒருவரை தற்காலிக துணைவேந்தராக நியமனம் செய்ய வேண்டும்.

வெளிநபர்கள் நடைபயிற்சிக்காக அண்ணா பல்கலைக்கழகத்துக்குள் வருவதை கட்டுப்படுத்த வேண்டும். காலையில் நடைபயிற்சிக்கு வருவோருக்கு கட்டண பாஸ் முறையை அமல்படுத்த வேண்டும். பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நுழைவாயில்களில் கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும். வளாகத்தில், 24 மணி நேரமும் ஊழியர்கள் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும். சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும்” இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

கிறிஸ்டோபர் ஜெமா

INDvsAUS : சர்வதேச அரங்கில் முதல் சதம் கண்ட நிதிஷ் குமார்… மயிரிழையில் மிஸ் ஆன சச்சின் சாதனை!

அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு தினமும் 10 முட்டை கொடுத்தாரா ஞானசேகர்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share