ஸ்மார்ட் மீட்டர்: அதானி குழுமத்துடன் ஒப்பந்தமா? – தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி!

Published On:

| By Selvam

[
novashare_inline_content
]

ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தில், அதானி போன்ற பெரு நிறுவனங்கள் கொள்ளையடிப்பதையும், அதற்கு தமிழக அரசு துணை போவதையும் அனுமதிக்க முடியாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (டிசம்பர் 6) தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஆகஸ்டில் கோரப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள்!

வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களின் மின்சாரப் பயன்பாட்டைத் துல்லியமாகக் கணக்கிடும் வகையிலும், மின்சார வாரியங்களின் தொழில்நுட்ப மற்றும் வணிக இழப்புகளைக் குறைக்கும் வகையிலும் அனைத்து மின் இணைப்புகளுக்கும் ஸ்மார்ட் மீட்டர்களைப் பொருத்துவதை கட்டாயமாக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, 2025-ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் கணிசமான எண்ணிக்கையிலான மின் இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட வேண்டும். இதற்கான ஒரு மீட்டருக்கு சராசரியாக ரூ.900 என்ற அளவில் மானியம் வழங்கவும் மத்திய அரசு முன்வந்திருக்கிறது.

தமிழ்நாட்டில் மொத்தம் 3 கோடி இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்படவுள்ளன. தமிழகத்தின் மாவட்டங்கள் மொத்தம் 4 தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக கடந்த ஆண்டு ஆகஸ்டில் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டன.

ஸ்மார்ட் மீட்டர்கள் விலை அதிகம்!

அவற்றில் முதல் தொகுப்புக்கான ஒப்பந்தங்களின் விலைப்புள்ளிகள் இறுதி செய்யப்படும் கட்டத்தை நெருங்கியிருப்பதாகவும், அதில் அதானி குழுமத்தைச் சேர்ந்த அதானி எனர்ஜி சொலுசன்ஸ் லிமிடெட் (Adani Energy Solutions Limited) குறைந்த விலையை குறிப்பிட்டிருப்பதால், அந்த நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்படக் கூடும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அதானி குழும நிறுவனம் குறைந்த விலையை குறிப்பிட்டிருப்பதால், அதற்கு ஒப்பந்தம் வழங்கப்படலாம் என்பதை மேலோட்டமாகப் பார்க்கும் போது, சரியான முடிவு தானே என்று தோன்றலாம்.

ஆனால், ஸ்மார்ட் மீட்டர் குறித்த முழுமையான விவரங்களை நன்றாக அறிந்தவர்களுக்குத் தான் இதன் பின்னணியில் உள்ள குறைகள் தெரியும்.

ஸ்மார்ட் மீட்டர்கள் என்பது இந்தியாவைப் பொறுத்தவரை புதிய தத்துவமாகும். சில ஆண்டுகளுக்கு முன்பு தான் இந்தியாவில் ஸ்மார்ட் மீட்டர் உற்பத்தி தொடங்கியது. தொடக்கத்தில் மிகச்சிறிய எண்ணிக்கையில் அவை உற்பத்தி செய்யப்படும் போது, அவற்றின் விலைகள் அதிகமாக இருக்கும்.

ஸ்மார்ட் மீட்டர் மூலதனச் செலவு!

காலப்போக்கில் அதிக எண்ணிக்கையில் அவை உற்பத்தி செய்யப்படும் போது, அவற்றின் விலைகள் இயல்பாகவே குறைந்து விடும். எடுத்துக்காட்டாக சில ஆண்டுகளுக்கு முன் ரூ.12,000 ஆக இருந்த ஒரு ஸ்மார்ட் மீட்டரின் விலை கடந்த ஆண்டு ரூ.6,000 ஆக இருந்தது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் புதுவை அரசு இது தொடர்பாக ஒப்பந்தம் செய்து கொண்ட போது, பராமரிப்புச் செலவையும் சேர்த்து ஒரு ஸ்மார்ட் மின்சார மீட்டருக்கான தொகையாக ரூ.6169 மட்டும் தான் குறிப்பிடப்பட்டிருந்தது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அதானி குழுமம் ஒரு ஸ்மார்ட் மீட்டருக்கு எவ்வளவு விலை குறிப்பிட்டிருக்கிறது என்பது தொடர்பான விவரங்கள் துல்லியாக வெளியாகவில்லை.

ஆனாலும் கூட, ஸ்மார்ட் மீட்டர்களை வாங்குவதற்கான மூலதனச் செலவுகளில் ஒரு பகுதியை தமிழ்நாடு மின்சார வாரியம் முன்பணமாக வழங்க விருக்கும் நிலையில், மீதமுள்ள தொகையை ஒரு மீட்டருக்கு, ஒரு மாதத்திற்கு குறிப்பிட்ட தொகை என்ற அளவில் அதானி குழும நிறுவனம் வசூலித்துக் கொள்ளும்.

அவ்வாறு வசூலிக்கப்படவிருக்கும் தொகை மாதத்திற்கு ரூ.120-ஐ விட அதிகம் என்று கூறப்படுகிறது. தமிழ்நாடு மின்சார வாரியத்திடம் ஒப்பந்தப் புள்ளிகளை தாக்கல் செய்திருக்கும் நிறுவனங்களால் குறிப்பிடப்பட்டுள்ள தொகைகளில் இது தான் மிகவும் குறைவு என்றாலும் கூட, இன்றைய கள நிலவரத்துடன் ஒப்பிடும் போது இது மிகவும் அதிகமாகும்.

ஸ்மார்ட் மீட்டர்களை பராமரிப்பதற்கான காலம் எவ்வளவு?

ஸ்மார்ட் மீட்டர்களை பராமரிப்பதற்கான காலம் 7 ஆண்டுகளா அல்லது 10 ஆண்டுகளா? என்பதை தமிழ்நாடு மின்சார வாரியம் இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

ஒருவேளை ஒப்பந்தக்காலம் 7 ஆண்டுகளாக இருந்து, ஒரு மீட்டருக்கு வசூலிக்கப்படவிருக்கும் தொகை ரூ.125 என்று வைத்துக் கொண்டால், தமிழ்நாடு மின்சார வாரியத்தால் முன்பணமாக வழங்கப்பட்ட தொகை இல்லாமல், ஒவ்வொரு மீட்டருக்கும் கூடுதலாக ரூ.10,500 வசூலிக்கப்படும்.

அதுவே ஒப்பந்தக்காலம் 10 ஆண்டுகளாக இருந்தால், ரூ.15,000 ஆகும். மாதாந்திர தொகையை குறைப்பது குறித்து அதானி குழுமத்துடன் பேச்சு நடத்தப்படுவதாக மின்வாரிய அதிகாரிகள் கூறியுள்ளனர். அதன்படி 10% குறைக்கப்பட்டாலும் கூட, அதானி குழுமத்திற்கு செலுத்தப்படும் தொகை மிகவும் அதிகமாகவே இருக்கும்.

இதை நேரடியாக நுகர்வோரிடமிருந்து மின் வாரியம் வசூலிக்காவிட்டாலும், கட்டண உயர்வு உள்ளிட்ட மறைமுக வழிகளில் வசூலித்து விடும். அண்டை மாநிலமான புதுச்சேரியில் ஒரு மீட்டருக்கான மொத்த செலவு ரூ.6169 எனக் குறிப்பிடப் பட்டுள்ளது.

அந்தத் தொகை நிர்ணயிக்கப்பட்டு இரு ஆண்டுகள் நிறைவடையவிருக்கும் நிலையில், ஸ்மார்ட் மீட்டர்களின் விலை ரூ.4,000 என்ற அளவுக்கு குறைந்து விட்டதாக கூறப்படுகிறது.

ஸ்மார்ட் மீட்டர்களைப் பொருத்துவதால் இழப்பு!

அவ்வாறு இருக்கும் நிலையில், தமிழக அரசால் வழங்கப்படும் முன்பணம் தவிர, அதானி குழுமத்திற்கு அதிகபட்சமாக ரூ.15,000 வீதம் 80 லட்சம் மீட்டர்களுக்கு வழங்கப்பட்டால் தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணம் எத்தனை ஆயிரம் கோடி தாரை வார்க்கப்படுகிறது என்பதை எளிதாக கணக்கிட்டுக் கொள்ள முடியும்.

ஸ்மார்ட் மீட்டர்களைப் பொறுத்துவதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோரப்பட்டன. அதன்பின்னர் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாகப் போகும் நிலையில், இடைப்பட்ட காலத்தில் ஸ்மார்ட் மீட்டர்களின் விலைகள் எவ்வளவு குறைந்திருக்கின்றன என்பதைக் கருத்தில் கொள்ளாமல் ஒப்பந்தப் புள்ளிகளை இறுதி செய்வது எந்த வகையில் நியாயம்?

இதனால் அரசுக்கு ஏற்படும் நிதி இழப்பை யார் ஏற்பார்கள்? ஸ்மார்ட் மீட்டர்களைப் பொருத்தும் திட்டத்தை மின்சார வாரியமே செயல்படுத்துவதில் என்ன சிக்கல்? என்பதை அறிந்து கொள்ள முடியவில்லை.

ஒரு ஸ்மார்ட் மீட்டருக்கு மத்திய அரசின் சார்பில் சராசரியாக ரூ.900 மானியம் வழங்கப்படும் நிலையில், அத்துடன், ஒவ்வொரு மின் இணைப்புக்கும் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ள மீட்டருக்கான கட்டணத்தையும் சேர்த்து கழித்து விட்டால், ஒவ்வொரு ஸ்மார்ட் மீட்டருக்கும் நுகர்வோர் செலுத்த வேண்டிய தொகை ரூ.2000 முதல் ரூ.2500 என்ற அளவில் தான் இருக்கும்.

ஸ்மார்ட் மீட்டர்களைப் பொருத்துவதால் இழப்புகள் கட்டுப்படுத்தப்பட்டு, மின்சார வாரியத்திற்கு கிடைக்கும் லாபத்தை வைத்துப் பார்க்கும் போது இந்த செலவையும் மின்வாரியமே ஏற்றுக்கொள்ளலாம்.

ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டம் ஒரு வகையான சீர்திருத்தம் என்பதை எவரும் மறுக்க முடியாது. ஆனால், அதையே காரணம் காட்டி, ஸ்மார்ட் மீட்டர்களைப் பொருத்தி, பராமரிப்பதில் அதானி போன்ற பெரு நிறுவனங்கள் கொள்ளையடிப்பதையும், அதற்கு தமிழக அரசு துணை போவதையும் அனுமதிக்க முடியாது.

எனவே, ஸ்மார்ட் மீட்டர்களைப் பொருத்துவதற்காக ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் கோரப்பட்ட அனைத்து ஒப்பந்தப்புள்ளிகளையும் மின்வாரியம் ரத்து செய்ய வேண்டும். மின்வாரியமே வெளிப்படையான போட்டி ஏல முறையில் ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்து மின் இணைப்புகளுக்கு பொருத்த வேண்டும்.

அதற்கு மாறாக, தனியார் பெரு நிறுவனங்களுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் ஒப்பந்தம் வழங்கப்பட்டால், அதை எதிர்த்து தமிழக மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பாமக நடத்தும்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

பியூட்டி டிப்ஸ்:  நடிகைகளின் ‘ஆன்டி- இன்ஃப்ளமேட்டரி டயட்’… எல்லோருக்கும் ஏற்றதா?

அடுத்த 25 ஆண்டுக்கால உயர்வு: ஸ்டாலின்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel