ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடி அனுமதி பெற்று சுமார் 400 விசைப்படகுகளில் ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று (அக்டோபர் 26) மீன் பிடிக்கச் சென்றனர்.
மீனவர்களுக்கு சிறை
நேற்று மாலை கச்சத்தீவுக்கும் நெடுந்தீவுக்கும் இடையில் மீன் பிடித்து கொண்டிருந்த கிளிண்டன், பேதுகு, வினிஸ்டன், தயான், மரியான், தானி, ஆனஸ்ட் ஆகிய ஏழு மீனவர்களை கைது செய்து மைக்கேல் ராஜ் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும், மீனவர்கள் 7 பேரும் இன்று யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
அதுமட்டுமின்றி இலங்கை கடற்படையினர் மீன்பிடி வலைகளைப் பறித்து கடலில் வீசியுள்ளனர். இதனால் படகு ஒன்றுக்கு 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கரை திரும்பிய மீனவர்கள் வேதனை தெரிவித்தனர்.
அன்புமணி ராம்தாஸ் கண்டனம்
இலங்கை கடற்படையினரின் இந்த செயலுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து இன்று (அக்டோபர் 27) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 7 பேர் சிங்கள கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிங்கள கடற்படையினரின் இந்த அத்துமீறல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 3 மீனவர்களைக் கடந்த 20-ஆம் தேதி சிங்களப் படை கைது செய்தது. அவர்கள் இன்னும் விடுவிக்கப்படாத நிலையில், ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாகத் தமிழக மீனவர்களைக் கைது செய்து சிங்களப் படை மீண்டும் அத்துமீறலை அரங்கேற்றியிருக்கிறது.
கடந்த ஜூன் மாதம் மீன்பிடி பருவம் தொடங்கிய பிறகு நடைபெறும் பத்தாவது கைது நடவடிக்கை இதுவாகும். இதுவரை மொத்தம் 84 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்காக இந்திய அரசு கண்டிக்காததும், எச்சரிக்காததும் தான் மீண்டும், மீண்டும் அத்துமீறும் துணிச்சலை சிங்கள அரசுக்குக் கொடுத்துள்ளது.
தமிழக மீனவர்களைத் தாக்குவதோ, அத்துமீறி கைது செய்வதோ கூடாது என இலங்கை அரசை மத்திய அரசு எச்சரிக்க வேண்டும்.
ஒரு வாரத்தில் கைது செய்யப்பட்ட 10 மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
மோனிஷா
தமிழ் மொழியில் தொழில்கல்வி: பாஜக ஆர்பாட்டம்!
தீபாவளிக்குப் பின் குறைந்த தங்கம் விலை!