அமமுக செயற்குழு கூட்டம் வரும் 7ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில், தற்போது 20ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று (ஜூன் 1)அறிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின், அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பூசலால் டிடிவி.தினகரன் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து, கடந்த 2018ஆம் ஆண்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை டி.டி.வி. தினகரன் தொடங்கினார்.
தொடர்ந்து அதிமுகவில் நிலவி வந்த எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் இடையேயான ஒற்றை தலைமை மோதல் மற்றும் திமுக அரசுக்கு எதிராகவும் அவ்வபோது கருத்து தெரிவித்து வந்தார்.
சமீபத்தில் நீதிமன்றத் தீர்ப்பின்படி, அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்ட பின்னர், அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவுடன் இணைந்து செயல்படவுள்ளதாக தெரிவித்தார்.
அதனையடுத்து அமமுக செயற்குழு கூட்டம் வரும் 7ஆம் தேதி கட்சியின் துணைத்தலைவர் அன்பழகன் தலைமையில் நடைபெறும் என்று டிடிவி தினகரன் அறிவித்தார்.
இந்நிலையில் கழகத்தின் செயற்குழு கூட்டம் வரும் ஜூன் 7ஆம் தேதிக்கு பதிலாக ஜூன் 20ஆம் தேதி காலை 9 மணி அளவில் சென்னை ராயப்பேட்டையிலுள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
மேலும் அனைத்து கழக செயற்குழு உறுப்பினர்களும் தங்களுக்கான அழைப்பிதழோடு தவறாமல் வந்து கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
தயாரிப்பாளர்கள் நலனுக்காக மெளனம் காக்கிறேன்: நடிகர் சித்தார்த்
கேரளாவில் ரயிலுக்கு தீ வைப்பு: போலீஸ் விசாரணை!
”முன்கூட்டியே பள்ளிகளை திறக்கக் கூடாது” : அமைச்சர் அன்பில் மகேஷ்