துணை ஜனாதிபதி, மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோர் இன்று (ஜனவரி 31) சென்னை வர உள்ளதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. amitshah coming to chennai 31
முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு மகள் வழி பேரன் திருமண வரவேற்பு விழா மாமல்லபுரத்தில் உள்ள பிரமாண்டமான 5 நட்சத்திர ரிசார்ட்டில் இன்று மாலை நடக்கிறது.
இந்த திருமண வரவேற்பு விழாவில், கலந்து கொள்வதற்காக துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் இன்று பிற்பகல் 2.15 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு மாலை 4.45 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு, சென்னை கிழக்கு கடற்கரை சாலை சென்று அங்கு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
பின்பு காரில் மாமல்லபுரம் சென்று, வெங்கய்யா நாயுடு இல்ல திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு விட்டு, மீண்டும் மாமல்லபுரத்தில் இருந்து காரில் புறப்பட்டு இரவு 8.30 மணி அளவில் சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து உடனடியாக தனி விமானத்தில், டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.
அதேபோல், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மாலை 4.30 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு இரவு 7 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வந்து, அங்கிருந்து இரவு 8 மணிக்கு மாமல்லபுரம் செல்கிறார். அங்கு வெங்கய்யா நாயுடு இல்ல திருமண வரவேற்பு விழாவில் கலந்துகொண்டு விட்டு, இரவு 8.35 மணிக்கு மாமல்லபுரத்தில் இருந்து அமித்ஷா, இரவு 9.35 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து இரவு 9.40 மணிக்கு தனி விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.
இதுபோல, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட சில மாநில முதலமைச்சர்கள், ஒடிசா, திரிபுரா, மேகாலயா உள்ளிட்ட சில மாநிலங்களின் கவர்னர்கள், மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் வெங்கய நாயுடு இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக தனி விமானங்களில் இன்று சென்னைக்கு வருகின்றனர்.
சிகப்பு மண்டலமாக அறிவிப்பு! amitshah coming to chennai 31
இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே, குடியரசு தின விழா பாதுகாப்புக்காக போடப்பட்ட 5 அடுக்கு பாதுகாப்பு இன்று (31ம் தேதி) நள்ளிரவு வரை நீடிக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு முக்கிய பிரமுகர்களின் வருகையையொட்டி விமான நிலையம் முதல் முட்டுக்காடு, மகாபலிபுரம் வரையிலான வழித்தடங்களில் டிரோன் பறக்க தடை விதித்து பெருநகர காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை பெருநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சென்னை விமான நிலையம், ராஜ் பவன் மற்றும் விவிஐபி பயணிக்கும் வழித்தடங்கள் ‘சிவப்பு மண்டலமாக’ அறிவிக்கப்பட்டு இன்று அந்த பகுதிகளில் மற்றும் வழித்தடங்களில், ரிமோட்லி பைலட் ஏக்கிராப்ட் சிஸ்டம்ஸ், ட்ரோன் ஆளில்லா விமானம், பறக்க விட தடை செய்யப்படுகிறது.

போக்குவரத்து மாற்றம்!
மேலும் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளின் போக்குவரத்து இயக்கத்தினை சுமூகமாகவும், தாமதத்தை குறைப்பதை உறுதி செய்வதற்காகவும் மதியம் 2 மணி முதல் இரவு 10 மணிவரை
சென்னை விமான நிலையத்திலிருந்து கிழக்குக் கடற்கரைச் சாலைக்கு (ECR) செல்லும் வாகன ஓட்டிகள், பழைய மகாபலிபுரம் சாலையை (OMR) மாற்றுப் பாதையாகப் பயன்படுத்தி தங்கள் இலக்கை அடையலாம்.
குறிப்பிட்ட நேரத்தில் அனைத்து வணிக வாகனங்களும் விமான நிலையம் முதல் ECR வரை உள்ள சாலையைப் பயன்படுத்த தடை விதிக்கப்படும் என சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.