இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் 75 ஆவது ஆண்டு விழா இன்று (நவம்பர் 12) சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடந்துகொண்டிருக்கிறது. இவ்விழாவில் தலைமை விருந்தினராக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டுள்ளார்.
இந்த விழாவில் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் துணை தலைவரும், நிர்வாக இயக்குனருமான சீனிவாசன் பேசும்போது அமித் ஷாவின் வெற்றிகளின் ரகசியத்தை பற்றி பேசினார்.
“பரபரப்பான நிகழ்ச்சி நெருக்கடியில் நேற்று இரவு எனக்காக சென்னை வந்து இன்று இந்த நிகழ்ச்சி முடித்துக் கொண்டு உடனடியாக திரும்புகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா.
என் மீது அமித் ஷா இவ்வளவு அன்பு காட்டும் அளவுக்கு நான் அப்படி என்ன செய்துவிட்டேன் என தெரியவில்லை.
சில மாநிலங்களில் தேர்தல்கள் நடந்துகொண்டிருக்கின்றன. உள்துறை அமைச்சராக அவர் நாட்டை வழி நடத்திக் கொண்டிருக்கிறார். அவரது துறை ரீதியாக மட்டுமல்ல பொருளாதார ரீதியாகவும் அவரே நாட்டை வழிநடத்துகிறார்.
நான் பொறியியல் படித்தவன். மேலாண்மை படிப்புகளையும் படித்துள்ளேன். எனினும் நான் நமது உள்துறை அமைச்சரிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டு வருகிறேன்.
அவரது எத்தனையோ செயல்பாடுகளை கவனித்து வருகிறேன். அனைத்துக்கும் அடிப்படை அமித் ஷாவின் Meticulous planning அதாவது நுணுக்கமான திட்டமிடல்தான். நுணுக்கமான திட்டமிடல் மட்டுமல்ல வியக்க வைக்கும் செயலாக்குதலும் அமித் ஷாவின் தனிச்சிறப்பு.
அவரது வெற்றிக்குக் காரணம் முழுமையான கவனக் குவிப்பு. எந்த நிலையிலும் நிதானத்தை இழக்காமல் இருப்பவர் அமித் ஷா.
மிக முக்கியமான விஷயம். அவரது கவனக் குவிப்பு. நம்மில் பலர் மல்டி டேஸ்க்குகளை வைத்துக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருப்போம்.
ஆனால் அமித் ஷா அப்படி அல்ல, சிங்கிள் பாயிண்ட் ஃபோகஸ். அவர் ஒரு டேஸ்க்கை எடுத்துக் கொண்டு அதை மட்டுமே கவனித்து ஈடுபட்டு செய்து முடிப்பார். ஒரு செயலை செய்யும் நேரம் இன்னொரு விஷயத்தில் கவனத்தை சிதறவிடமாட்டார்.
இப்பேற்பட்ட ஓர் வெற்றியாளர் இங்கே வந்திருப்பது என்னை மட்டுமல்ல இந்த நிறுவனத்தை நிறுவியர்களை பெருமைப்படுத்துகிறது” என்று குறிப்பிட்டார் இந்தியாவின் வெற்றிகரமான தொழிலதிபரான இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன்.
–ஆரா