சட்டமேதை அம்பேத்கர் சுவரொட்டியை அவமதித்த வழக்கில் இந்து மக்கள் கட்சி பிரமுகர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
சட்டமேதை அம்பேத்கரின் நினைவு தினம் கடந்த டிசம்பர் 6ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் அம்பேத்கர் சிலை மற்றும் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிலையில், தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி பொதுச் செயலாளர் குருமூர்த்தி, அம்பேத்கர் உருவ படத்தில் காவி உடை அணிவித்து விபூதி பூசி, குங்குமம் வைத்து சுவரொட்டிகள் ஒட்டியிருந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் கும்பகோணம் மாநகரம் முழுவதும் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் சுவரொட்டி ஒட்டிய இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் குருமூர்த்தியை போலீசார் வீட்டுக்காவலில் வைத்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மண்டலச் செயலாளர் விவேகானந்தன், தொகுதிச் செயலாளர் முல்லைவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்டச் செயலாளர் சின்னை பாண்டியன் ஆகியோர் கும்பகோணம் கிழக்கு போலீஸ் நிலையத்துக்கு ஆதரவாளா்களுடன் சென்று தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கைது போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், குருமூர்த்தி மீது வழக்குப் பதிந்து கைது செய்வோம் என உறுதியளித்தனர்.
அதைத் தொடர்ந்து குருமூர்த்தியும் கைது செய்யப்பட்டு, கும்பகோணம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் அம்பேத்கரை அவமதித்த சுவரொட்டி ஒட்டிய வழக்கில் இந்து மக்கள் கட்சி பிரமுகர் குருமூர்த்தி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
கும்பகோணம் கிளைச்சிறையில் இருந்த அவர், திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.
ஜெ.பிரகாஷ்
பொன்முடிக்கு எதிரான வழக்கு: ஜனவரி 4இல் விசாரணை!