ஒரு தொகுதியை வைத்து அதிமுகவை எடைபோடுவது அமர்பிரசாத்தின் அறியாமையைத் தான் காட்டுவதாக அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கேபி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மாநில பாஜக ஐடி விங் தலைவராக இருந்த நிர்மல்குமார் கடந்த 5ம் தேதி அண்ணாமலை மீது கடும் குற்றச்சாட்டை சுமத்திவிட்டு அதிமுகவில் இணைந்தார்.
அவரைத்தொடர்ந்து பாஜக ஐடி பிரிவு மாநில செயலாளர் திலீப் கண்ணன் மற்றும் மேலும் சில பாஜக மாநில நிர்வாகிகளும் அதிமுகவில் இணைந்துந்துள்ளனர்.
இதற்கிடையே பாஜக நிர்வாகிகள் விலகல் குறித்து அண்ணாமலைக்கு நெருக்கமானவராக கருதப்படும் அமர்பிரசாத் ரெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக சாடினார்.
அவரது பதிவில், “கொங்கு மண்டலத்தை தங்கள் கோட்டையாக கருதிய அதிமுகவினருக்கு கொங்கு மண்டல வாக்காளர்கள் தக்க பாடத்தை புகட்டியுள்ளனர்.
ஈரோடு இடைத்தேர்தலில் 66 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோற்றது அங்கு அதிமுக மீண்டு எழுவதற்கான அறிகுறி இல்லை என்பதை காட்டுகிறது. கோட்டையை பிடிப்பதற்கான கனவை மறந்து விடுங்கள்.
கட்சி மாறிய கொள்கையற்ற பிழைப்புவாதிகளை வைத்து அடுத்தவரை கேவலப்படுத்தி ரசிக்கும் கேவலமானவர்கள் தலைமைப் பொறுப்புக்குத் தகுதியானவரா?” கூறியிருந்தார்.
இந்த ட்வீட் காரணாக அதிமுக – பாஜக இடையேயான கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு மோதல் போக்கு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்தது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கே.பி. முனுசாமியிடம் அமர்பிரசாத் ரெட்டி பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், “அதிமுகவை அனைவருக்குமானதாக தான் எம்ஜிஆர் ஆரம்பித்தார். தமிழ்நாடு கடந்து உலகில் எங்கெல்லாம் தமிழர்கள் இருக்கிறார்களோ அவர்களின் கட்சியாகவும் அதிமுக உள்ளது.
தமிழ்நாட்டில் 30 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த அதிமுகவை ஒரு தொகுதியை மட்டுமே வைத்து எடைபோடுவது அமர்பிரசாத்தின் அறியாமையைத் தான் காட்டுகிறது.” என்று தெரிவித்தார்.
கிறிஸ்டோபர் ஜெமா
அதிமுகவுக்கு செல்லும் நிர்வாகிகள்: எடப்பாடிக்கு அண்ணாமலை எச்சரிக்கை!
ஹோலி பண்டிகையில் ரஜினியுடன் படப்பிடிப்பை துவக்கிய லைகா!