நான் ஏக்நாத் ஷிண்டே இல்லை என்றும் திமுக ஐடி விங் எதையாவது பேசி குளிர்காய நினைக்கிறது என்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
இன்று அதிமுகவின் 52ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கோவை அவிநாசி சாலையில் உள்ள முன்னாள் முதல்வர்களான அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் பாஜக கூட்டணி முறிவுக்குப் பின்னர் அதிமுகவின் ஏக்நாத் ஷிண்டே என்று உங்களை சொல்கிறார்களே? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய வேலுமணி, “இந்த பிரச்சினையை யார் கிளப்புவது? எங்கிருந்து வருகிறது எனத் தெரியவில்லை. எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவுக்கு பிறகு இக்கட்சியின் தலைவராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்.
ஆகவே நிறைய பேர் எப்படியாவது எதையாவது செய்து குளிர் காயலாம் என்று நினைக்கிறார்கள். குறிப்பாக திமுக ஐடி விங். சில பத்திரிக்கையாளர்களும் இதைப் பற்றிப் பேசுகின்றன.
ஏக்நாத் ஷிண்டே எப்படிப் பார்த்தாலும் கட்சிக்கும் துரோகம் செய்தவர். அந்த பக்கம் நான் போகவில்லை. 1972ஆம் ஆண்டில் கட்சி தொடங்கப்பட்டு எனது தந்தையார் காலத்திலிருந்து இந்த கட்சி குடும்பத்திலிருந்து வருகிறேன்.
எடப்பாடியார் தான் எங்களுக்குத் தலைவர், அவர் பின் நாங்கள் இருக்கிறோம். எதாவது குழப்பம் செய்யப் பார்க்கிறார்கள். ஆனால் எதுவும் நடக்கப்போவதில்லை.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டணி அமையும். 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.
எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது கோவைக்குத் தேவையானவற்றைச் செய்திருக்கிறார். 50 ஆண்டுக்கால வளர்ச்சியைக் கோவைக்குக் கொடுத்திருக்கிறார்.
ஆனால் தற்போது திமுக எதுவும் செய்யவில்லை. முதல்வருக்கு என்மேல் கோவம். கோவையில் 11 தொகுதியிலும் அதிமுக வெற்றி பெற்றது. இதுதான் ஸ்டாலினுக்கு கோவம்.
பாஜக கூட்டணியிலிருந்து வெளியில் வந்துவிட்டோம் என எடப்பாடி பழனிசாமி தெளிவாகக் கூறிவிட்டார். இதனை இவர்களால் தாங்க முடியவில்லை.
இந்த சில்மிஷங்கள் செய்து எங்களைப் பிரிப்பதெல்லாம் நடக்காது. எடப்பாடி பழனிசாமி துரோகங்களை முறியடித்து வந்தவர். அவர் நிச்சயம் மீண்டும் முதல்வராவார். திமுக தராத திட்டங்களைக் கேட்டு பெறுவோம்” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
சிவகாசியில் பட்டாசு விபத்து : 14 பேர் பலி!